தமிழ்நாட்டின் 21 ஆவது முதல்வராகப் பதவியேற்கிறார் சசிகலா
தமிழ்நாட்டின் புதிய முதல்வராக,அதிமுக பொதுச்செயலர் வி.கே.சசிகலா தெரிவு செய்யப்பட்டுள்ளார். அவர் வரும் 9ஆம் நாள் பதவிப்பிரமாணம் செய்து கொள்ளவுள்ளார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
அவர் பதவியேற்பதற்கு வசதியாக, தமிழ்நாடு முதல்வர் ஓ.பன்னீர்ச்செல்வம், இன்று தனது பதவி விலகல் கடிதத்தை ஆளுனருக்கு அனுப்பியுள்ளார்.
தமிழ்நாடு முதல்வராக இருந்த செல்வி. ஜெயலலிதா 2016 டிசெம்பர் 05ஆம் நாள் நள்ளிரவு மரணமானதையடுத்து, மறுநாள் அதிகாலையில், ஓ.பன்னீர்ச்செல்வம் முதலமைச்சராகப் பதவியேற்றார்.
இந்த நிலையில், கடந்த டிசெம்பர் 29ஆம் நாள் நடந்த அதிமுக பொதுக்குழுக் கூட்டத்தில், கட்சியின் புதிய பொதுச்செயலராக, வி.கே.சசிகலா தெரிவு செய்யப்பட்டார்.
இந்த நிலையில், இன்று அதிமுக தலைமையகத்தில் நடந்த கட்சியின் சட்டமன்றக் குழுக் கூட்டத்தில், சசிகலாவை, சட்டமன்றக் குழுவின் தலைவராக நியமிக்கும் பிரேரணையை, முதல்வர் பன்னீர்ச்செல்வம் முன்மொழிந்தார்.
இந்த தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டதையடுத்து, சசிகலா கட்சித் தலைமையகத்துக்கு வந்து, சட்டமன்ற உறுப்பினர்கள் மத்தியில் உரையாற்றினார். முதல்வர் பதவியைத் தாம் ஏற்றுக் கொள்ளவுள்ளதாகவும் அறிவித்தார்.
இந்த நிலையில், ஓ.பன்னீர்செல்வம் தனிப்பட்ட காரணங்களுக்காக தாம் பதவி விலகுவதாகவும், தமது அமைச்சரவையை கலைத்து விடுமாறும், ஆளுனர் வித்தியாசாகர் ராவுக்கு கடிதம் அனுப்பியுள்ளார்.
இதையடுத்து, புதிய சட்டமன்ற குழு தலைவராக தெரிவு செய்யப்பட்டுள்ள வி.கே.சசிகலா, ஆட்சியமைக்க உரிமை கோருவார்.
அவருக்கு ஆளுனர் வரும் 9ஆம் நாள் தமிழ்நாட்டின் 21 ஆவது முதலமைச்சராக பதவிப்பிரமாணம் செய்து வைக்கவுள்ளார்.