யாழ். போராட்டத்தைப் படம் பிடித்த சிறப்புப் படைப்பிரிவு அதிகாரி
யாழ்ப்பாண மாவட்டச் செயலகம் அருகே நேற்று நடத்தப்பட்ட கருப்புக் கொடி ஏந்திய கவனயீர்ப்புப் போராட்டத்தை சிறிலங்கா இராணுவத்தின் சிறப்புப் படைப்பிரிவை சேர்ந்த ஒருவர் காணொளிப்படம் பிடிக்கும் நடவடிக்கையில் ஈடுபடுத்தப்பட்டிருந்தார்.
சிறிலங்காவின் சுதந்திர நாளுக்கு எதிர்ப்புத் தெரிவித்து நடத்தப்பட்ட போராட்டத்தையே சிறப்புப் படைப்பிரிவின் லான்ஸ் கோப்ரல் ஒருவர் காணொளிப் படம் பிடித்துக் கொண்டிருந்தார்.
இராணுவ சீருடையில், சிறப்புப் படைப்பிரிவினரின் பட்டியை அணிந்து கொண்டு இவர் இந்த நடவடிக்கையில் ஈடுபட்டதைக் காண முடிந்தது.
இராணுவப் புலனாய்வுப் படைப்பிரிவினரே, இத்தகைய நடவடிக்கைகளில், சீருடையிலும், சீருடையில்லாமலும், ஈடுபடுவது வழக்கமாகும்.
எனினும், சிறப்புப் படைப்பிரிவைச் சேர்ந்த ஒருவர், சீருடையில் இந்த நடவடிக்கையில் ஈடுபடுத்தப்பட்டிருந்தமை வழக்கத்துக்கு மாறான செயற்பாடாகும்.
சிறிலங்கா இராணுவத்தின் சிறப்புப் படைப்பிரிவின் கட்டளை அதிகாரியாக, தற்போதைய யாழ். படைகளின் கட்டளை தளபதியாக இருக்கும், மேஜர் ஜெனரல் மகேஸ் சேனநாயக்கவே பணியாற்றி வருகிறார்.
அவரது உத்தரவின் பேரிலேயே, சிறப்புப் படைப்பிரிவைச் சேர்ந்த லான்ஸ் கோப்ரல், காணொளிப்பதிவு நடவடிக்கையில் ஈடுபட்டிருக்கலாம் என்று தெரியவருகிறது.
விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரில், ஆழ ஊடுருவும் நடவடிக்கைகளில் ஈடுபடுவதற்காக இந்த சிறப்புப் படைப்பிரிவு உருவாக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இத்தகைய படைப்பிரிவைச் சேர்ந்தவர்கள், யாழ்ப்பாணத்தில் நடந்த போராட்டத்தை காணொளிப்பதிவு செய்தது ஏன் என்ற கேள்விகள் எழுந்துள்ளன.