சிறிலங்கா அதிபரிடம் நியமனப் பத்திரங்களை கையளித்தார் புதிய இந்தியத் தூதுவர்
சிறிலங்காவுக்கான புதிய இந்தியத் தூதுவர் தரன்ஜித் சிங் சந்து இன்று சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவிடம், தனது நியமனப் பத்திரங்களை சமர்ப்பித்து, பதவியைப் பொறுப்பேற்றுக் கொண்டார்.
இன்று காலை சிறிலங்கா அதிபர் மாளிகையில், இந்தியத் தூதுவர் தரன்ஜித் சிங் சந்து, சிறிலங்கா அதிபரைச் சந்தித்தார்.
இதன்போது, தூதுவர் நியமனம் தொடர்பான பத்திரங்களை அவர் சிறிலங்கா அதிபரிடம் முறைப்படி கையளித்தார்.
இந்த நிகழ்வில் சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீரவும் கலந்து கொண்டார்.
இந்திய வெளிவிவகார அமைச்சின் அதிகாரியாக 30 ஆண்டுகள் பணியாற்றிய அனுபவம் கொண்ட தரன்ஜித் சிங் சந்து, இதற்கு முன்னர் வொசிங்டனில் இந்தியத் துணைத் தூதுவராகப் பணியாற்றியிருந்தார்.
அதற்கு முன்னர், மொஸ்கோ, கீவ், கொழும்பு, வொசிங்டன், நியூயோர்க், பிராங்போர்ட் ஆகிய நகரங்களில் உள்ள இந்திய தூதரகங்களில் அதிகாரியாகவும் பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது.
அதேவேளை, இன்று காலை மொங்கோலியா, லிதுவேனியா, பனாமா ஆகிய நாடுகளின் புதிய தூதுவர்களும் சிறிலங்கா அதிபரிடம் தமது நியமனப் பத்திரங்களைக் கையளித்தனர்.