அம்பாந்தோட்டை ஆர்ப்பாட்டங்களால் சிறிலங்காவுடனான உறவுகள் கெடாது – சீனா
அம்பாந்தோட்டையில் அண்மையில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டங்களினால், சிறிலங்காவுடனான சீனாவின் உறவுகளுக்கு பாதிப்பு ஏற்படாது என்று சீனத் தூதரக அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
சிறிலங்காவுக்கான சீனத் தூதரக கலாசார விவகாரங்களுக்கான அதிகாரி லூய் டோங் கொழும்பில் இன்று நடத்திய செய்தியாளர் சந்திப்பிலேயே இதனைத் தெரிவித்தார்.
“சிறிலங்கா- சீன இராஜதந்திர உறவுகள் ஏற்பட்டு 60 ஆவது ஆண்டு நிறைவு கொண்டாடப்படுகிறது. என்ன நடந்தாலும் இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகள் வலுவாகவே இருக்கும்.
சிறிலங்காவில் சீன புத்தாண்டு பிரமாண்டமான முறையில் கொண்டாடப்படவுள்ளது. சிறிலங்கா அதிகாரிகளுடன் இணைந்து கலாசார விழா, திரைப்பட விழா என்பனவற்றுடன் சீனா புத்தாண்டு கொண்டாட்டங்களை நடத்தவுள்ளது.
சிறிலங்கா அதிபர் மற்றும் ஏனைய உயர்நிலை அதிகாரிகள் பங்கேற்கும், 60 ஆண்டு இராஜதந்திர உறவுகளை கொண்டாடும் விழா அடுத்தமாதம் கொழும்பில் நடைபெறும்.
அடுத்த 60 ஆண்டுகளில் சீன- சிறிலங்கா உறவுகள் நிச்சயமாக புதிய வரலாற்று உச்சத்தை தொடும்.” என்றும் அவர் தெரிவித்தார்.