ரணில் நாட்டில் இருக்கும் போதே ஆட்சியைக் கவிழ்ப்பேன் – மகிந்த
ரணில் விக்கிரமசிங்க வெளிநாடு சென்றிருக்கும் போது அவரது ஆட்சியைக் கவிழ்க்கப் போவதில்லை, அவர் நாட்டில் இருக்கும் போதே ஆட்சியைக் கவிழ்ப்பேன் என்று தெரிவித்துள்ளார் சிறிலங்காவின் முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்ச.
இந்த ஆண்டில் அரசாங்கத்தைக் கவிழ்ப்பேன் என்று மகிந்த ராஜபக்ச கூறியிருந்த நிலையில், அடுத்தவாரம் தாம் சுவிற்சர்லாந்து செல்லவுள்ளதாகவும், அந்தச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி முடிந்தால் தனது ஆட்சியைக் கவிழ்க்குமாறும் சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க கூறியிருந்தார்.
இதுகுறித்து கொழும்பு ஆங்கில நாளிதழ் ஒன்றுக்கு கருத்து வெளியிட்டுள்ள மகிந்த ராஜபக்ச,
“ரணில் விக்கிரமசிங்க நாட்டில் இல்லாத போது ஆட்சியைக் கவிழ்ப்பதற்கு நான் ஒன்றும் முதுகில் குத்துபவன் அல்ல.
ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்துவதற்கு ரணில் விக்கிரமசிங்க வெளிநாடு செல்லும் வரை காத்திருக்க வேண்டியதில்லை. அவர் சிறிலங்காவில் இருக்கும் போதே ஆட்சியைக் கவிழ்ப்பது தான் எனது திட்டம்.
தற்போதைய ஆட்சியாளர்களைப் பாதுகாத்துக் கொண்டிருக்கும் முரடர் குழு, அரசாங்கத்துக்கு எதிராகத் திரும்புகின்ற நாள் வெகு தொலைவில் இல்லை.
ஐதேக அதிகாரத்தைக் கைப்பற்றுவதற்கு உதவியமை தாம் செய்த தவறு என்று இப்போது எல்லோரும் உணரத் தொடங்கியுள்ளனர்” என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.