மேலும்

சரணடைந்த புலிகளின் பட்டியலை ஜனவரி 30இல் சமர்ப்பிக்க சிறிலங்கா இராணுவத்துக்கு உத்தரவு

mullaitivu-courtபோரின் இறுதிக்கட்டத்தில் சிறிலங்கா படையினரிடம் சரணடைந்த விடுதலைப் புலிகளின் பட்டியலை சமர்ப்பிக்குமாறு, சிறிலங்கா இராணுவத்துக்கு முல்லைத்தீவு மாவட்ட நீதிவான் நேற்று உத்தரவிட்டுள்ளார்.

போரின் இறுதிக்கட்டத்தில் சரணடைந்து காணாமற்போன விடுதலைப் புலிகள் இயக்க போராளிகள் தொடர்பான ஆட்கொணர்வு மனுக்கள் தொடர்பான விசாரணையின் போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

போரின் இறுதிக்கட்டத்தில் சரணடைந்த போராளிகளின் விபரங்கள் தமது படைப்பிரிவுத் தலைமையகத்தில் இருப்பதாக முன்னர் 58 ஆவது டிவிசனின் கட்டளை அதிகாரியாக இருந்த மேஜர் ஜெனரல் சானக குணவர்த்தன நீதிமன்றத்தில் சாட்சியமளித்திருந்தார்.

இதையடுத்து, அந்தப் பட்டியலைச் சமர்ப்பிக்குமாறு முல்லைத்தீவு நீதிவான் உத்தரவிட்ட போதும், நீண்ட இழுபறிகளுக்குப் பின்னர், சரணடைந்தவர்களின் பட்டியலுக்குப் பதிலாக  புனர்வாழ்வு அளிக்கப்பட்டோரின் பட்டியலை இராணுவத் தரப்பில் சமர்ப்பிக்கப்பட்டது.

அத்துடன் வேறு பட்டியல்கள் ஏதும் தம்மிடம் இல்லை என்றும் இராணுவத் தரப்பு கூறியிருந்தது.

நேற்று நடந்த விசாரணையின் போது, மேஜர் ஜெனரல் சானக குணவர்த்தன, சரணடைந்தவர்கள் தொடர்பாக தமக்கு எதுவும் தெரியாது என்று தெரிவித்தார்.

இந்த நிலையில், போரின் இறுதிக்கட்டத்தில் சரணடைந்த போராளிகள் பற்றிய பட்டியலை இராணுவத் தலைமையகம், வரும் ஜனவரி 30ஆம் நாளுக்குள் சமர்ப்பிக்க வேண்டும் என்று முல்லைத்தீவு மாவட்ட நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *