அனுமான் பாலம் குறித்து இந்தியாவுடன் பேசவில்லை- சிறிலங்கா பிரதமர்
இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையில் பாலம் அமைப்பது தொடர்பாக தம்முடன் இந்திய அரசாங்கம் எந்தப் பேச்சுக்களையும் நடத்தவில்லை என்று சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
அனுமான் பாலம் அமைக்கும் இந்த விவகாரம் தொடர்பாக, நேற்று சிறிலங்கா நாடாளுமன்றத்தில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கும், நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பிலவுக்கும் இடையில் சூடான விவாதங்களும் இடம் பெற்றன.
இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையில் பாலம் அமைப்பது தொடர்பான இந்திய நாடாளுமன்றத்தின் லோக் சபாவில் இந்திய மத்திய அமைச்சர் நிதின் கட்கரி வெளியிட்ட கருத்து தொடர்பாக தாம் அறியவில்லை என்று பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.
“நிதின் கட்கரியின் பேச்சு இந்திய நாடாளுமன்ற பதிவேட்டில் ஹிந்தியில் பதிவாகியுள்ளது. எனக்கு ஹிந்து மொழி தெரியதாது. அதனால் புரிந்து கொள்ள முடியவில்லை. உங்களுக்கு ஹிந்தி மொழி தெரிந்தால், மொழிபெயர்க்க முடியும் அதனை சபையில் சமர்ப்பிக்கலாம்.
ஆனால், பாலம் அமைக்கும் விவகாரம் தொடர்பாக இதுவரையில் எந்தப் பேச்சுக்களும் நடத்தப்படவில்லை.” என்று ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.
இதனால் ஆத்திரமடைந்த உதய கம்மன்பில, பொய்யான தகவலை இந்திய அமைச்சர் வெளியிட்டிருந்தால் அதுபற்றி இந்தியாவுக்கு அதிருப்தியை வெளிப்படுத்துவதற்கு அரசாங்கம் நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.