தெகிவளை தொடருந்து குண்டுவெடிப்பு வழக்கில் இருவருக்கு தலா 2 ஆண்டுகள் சிறைத்தண்டனை
தெகிவளை தொடருந்து குண்டுவெடிப்பு சம்பவம் தொடர்பான வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட இரண்டு சந்தேக நபர்களுக்கு தலா இரண்டு ஆண்டுகால கடூழியச் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
1996 ஜூலை 27ஆம் நாள் தெகிவளையில் தொடருந்தில் இடம்பெற்ற குண்டுவெடிப்பில், 60 பேர் கொல்லப்பட்டதுடன், 400 பேர் வரை காயமடைந்தனர்.
இந்த குண்டுவெடிப்புத் தாக்குதலுக்கு உதவினார்கள் என்ற குற்றச்சாட்டில், பிரதான சந்தேக நபர்களான மூவருக்கு, கடந்த 2010ஆம் ஆண்டு கொழும்பு மேல் நீதிமன்றம் 10 ஆண்டு சிறைத்தண்டனையை விதித்திருந்தது.
இந்தநிலையில், இந்தக் குண்டுவெடிப்புச் சம்பவத்துக்கு உதவினார்கள் என்ற குற்றச்சாட்டில், கடந்த 20 ஆண்டுகளாக விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த, சின்னப்பு செல்வராஜா, சுப்பையா சிறிதரன் ஆகிய இருவருக்கும் எதிரான வழக்கின் தீர்ப்பை கொழும்பு மேல்நீதிமன்ற ஆணையாளர் ஐராங்கனி பெரேரா, நேற்று அறிவித்தார்.
சந்தேக நபர்கள் இருவரும், குற்றத்தை ஒப்புக்கொண்டதையடுத்து, அவர்கள் 20 ஆண்டுகள் விளக்கமறியலில் இருந்ததைக் கருத்தில் கொண்டு. தலா இரண்டு ஆண்டுகள் கடூழியச் சிறைத்தண்டனை விதிக்கப்படுவதாக, நீதிபதி அறிவித்தார்.
இரண்டு ஆண்டுகள் சிறைவாசத்தை அனுபவித்த பின்னர், ஒரு ஆண்டு பூந்தோட்டம் புனர்வாழ்வு நிலையத்தில் புனர்வாழ்வு பெற வேண்டும் என்றும் அவர் உத்தரவிட்டார்.