அனைத்துலக மட்டத்தில் சிறிலங்கா படைகளுக்கு பயிற்சி வாய்ப்பு – கடற்படையினரிடம் மைத்திரி உறுதி
உலகின் முன்னேறிய நாடுகளில் கிடைக்கும் புதிய தொழில்நுட்ப அறிவைப் பெற்றுக் கொள்ளும் வகையில், முப்படையினருக்கும் மேலதிக பயிற்சிகளை அனைத்துலக மட்டத்தில், பெற்றுக் கொடுப்பதற்கான வாய்ப்புகளை தமது அரசாங்கம் கண்டறியும் என்று தெரிவித்துள்ளார் சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன.
திருகோணமலை கடற்படைப் பயிற்சிக் கல்லூரியில் பயிற்சியை முடித்த 81 அதிகாரிகள், பயிற்சியை முடித்து வெளியேறும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
நேற்றுமுன்தினம் முன்னிரவு இந்த நிகழ்வு திருகோணமலைக் கடற்படைத்தளத்தில் இடம்பெற்றது.
பயிற்சியை முடித்து வெளியேறும் கடற்படை அதிகாரிகளின் அணிவகுப்பைப் பார்வையிட்ட சிறிலங்கா அதிபர், பயிற்சியில் திறமையாகச் செயற்பட்ட ஐந்து அதிகாரிகளுக்கு வாள்களையும் பரிசளித்தார்.
இதையடுத்து அங்கு உரையாற்றிய சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன,
“தீவு நாடு என்ற வகையில் கடற்படை எமக்கு மிகவும் முக்கியமானது. கடற்படையை வலுப்படுத்துவதற்கு, முன்னைய அரசாங்கங்களும், தற்போதைய அரசாங்கமும் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்திருக்கின்றன.
தேசிய பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்கு இந்த நடவடிக்கை அவசியமானது.
விடுதலைப் புலிகளின் தீவிரவாதத்தை தோற்கடிப்பதில் சிறிலங்கா கடற்படை முக்கிய பங்காற்றியிருந்தது.” என்றும் அவர் குறிப்பிட்டார்.