சொத்துகள் வாங்கிக் குவித்தது குறித்து பசில் ராஜபக்சவிடம் 6 மணிநேரம் விசாரணை
சிறிலங்காவின் முன்னாள் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்சவிடம் நேற்று நிதி குற்ற விசாரணைப் பிரிவு காவல்துறையினர், ஆறு மணி நேரமாக விசாரணைகளை மேற்கொண்டனர்.
நேற்றுக்காலை 10 மணிக்குத் தொடங்கிய விசாரணைகள், பிற்பகல் 4.15 மணி வரை நீடித்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
கம்பகாவில், உறுகொட பகுதியில் வீடு ஒன்றுடன் சேர்த்து ஒன்றரை ஏக்கர் காணியை, 30 மில்லியன் ரூபாவுக்கு கொள்வனவு செய்தமை, 80 மில்லியன் ரூபாவுக்கு இரண்டு கட்டடங்களைக் கட்டியமை, மல்வான பகுதியில் 64 மில்லியன் ரூபாவுக்கு 17 ஏக்கர் காணியை கொள்வனவு செய்தமை, 120 மில்லியன் ரூபாவுக்கு மற்றொரு வீட்டை வாங்கியமை உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகள் தொடர்பாகவே நேற்று பசில் ராஜபக்சவிடம் விசாரணைகள் நடத்தப்பட்டன.
அத்துடன், மாத்தறையில், 50 மில்லியன் ரூபாவுக்கு ஒன்றரை ஏக்கர் காணிளை வாங்கியமை, பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் பரப்புரைகளுக்கு 36 மில்லியன் ரூபாவுக்கு குழாய்களை வாங்கியமை குறித்தும் அவரிடம் அவரிடம் விசாரணைகள் நடத்தப்பட்டுள்ளன.