சிறிலங்காவுக்கு சுத்திகரிக்கப்பட்ட எரிபொருளை வழங்க ரஷ்யா இணக்கம்
சிறிலங்காவுக்கு மூன்று நாள் பயணம் மேற்கொண்டுள்ள ரஷ்ய எரிசக்தி பிரதி அமைச்சர் ரோமன் மார்ஷாவின், சிறிலங்காவுக்கு சுத்திகரிக்கப்பட்ட எரிபொருளை வழங்க இணங்கியுள்ளார்.
நேற்று சிறிலங்கா அதிகாரிகளுடன் நடந்த பேச்சுக்களின் போது அவர் இதற்கான இணக்கத்தை தெரிவித்தார் என, சிறிலங்கா பெட்ரோலிய கூட்டுத்தாபனத்தின் நிர்வாக இயக்குனர் மயூர நெத்திகுமாரகே, தெரிவித்துள்ளார்.
இன்று திட்டமிடப்பட்டுள்ள பேச்சுக்களின் போது எரிபொருளின் அளவு எள்ளிட்ட மேலதிக விடயங்கள் முடிவு செய்யப்படும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அதேவேளை, சிறிலங்கா அதிபர் அனுரகுமார திசாநாயக்க நேற்று மாலை அதிபர் செயலகத்தில் ரஷ்ய பிரதி எரிசக்தி அமைச்சர் மார்ஷாவினை சந்தித்தார்.
எரிசக்தி துறையில் இருதரப்பு ஒத்துழைப்பை வலுப்படுத்துவது குறித்து இந்தச் சந்திப்பின் போது விரிவாகப் பேச்சு நடத்தப்பட்டுள்ளது.
எரிபொருள் விநியோகம், எரிசக்தி பாதுகாப்பு மற்றும் நீண்டகால ஒத்துழைப்பு ஆகியவற்றில் சாத்தியமான கூட்டாண்மைகள் உட்பட,சிறிலங்காவுக்கும் ரஷ்ய கூட்டமைப்புக்கும் இடையிலான ஒத்துழைப்பை மேம்படுத்துவது குறித்தும் ஆராயப்பட்டுள்ளது.

