மானிப்பாயில் சூட்டுக்குப் பலியானவர் கொடிகாமம் இளைஞன்
மானிப்பாய் பகுதியில் நேற்றிரவு சிறிலங்கா காவல்துறையினரால் சுட்டுக் கொல்லப்பட்ட இளைஞன், தென்மராட்சி கொடிகாமத்தைச் சேர்ந்தவர் என்று உறவினர்களால் அடையாளம் காணப்பட்டுள்ளார்.
கொடிகாமத்தைச் சேர்ந்த, செல்வரத்தினம் கவிகஜன் என்ற, 23 வயதுடைய இளைஞனே கொல்லப்பட்டவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
அவரது சடலத்தை இன்று அதிகாலை உறவினர் ஒருவர் யாழ்.போதனா மருத்துவமனையில் அடையாளம் காண்பித்துள்ளார்.
இவர் உள்ளிட்ட 6 இளைஞர்கள் நேற்றிரவு தென்மராட்சியில் இருந்து மூன்று உந்துருளிகளில் புறப்பட்டுச் சென்றதாகவும் உயிரிழந்த இளைஞனின் உறவினர்கள் கூறியுள்ளனர்.
கொல்லப்பட்ட இந்த இளைஞன், ஆவா குழு உறுப்பினர் என்றும், நேற்றிரவு சிறிலங்கா காவல்துறையினர் மறித்த போது அவர்களை தாக்கி விட்டுத் தப்பிச் செல்ல முயன்ற போது, காவல்துறையினரின் துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தார் எனவும், சிறிலங்கா காவல்துறை பேச்சாளர் ருவன் குணசேகர தெரிவித்திருந்தார்.
இந்த துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம், மானிப்பாய்- இணுவில் வீதியில் நேற்றிரவு 8.40 மணியளவில் இடம்பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.