மேலும்

மைத்திரிக்கு இன்னமும் 45 நாட்களே காலஅவகாசம்

சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன, அதிபர் தேர்தலுக்கான அறிவிப்பை வெளியிடுவதற்கு, இன்னமும் ஒன்றரை மாத காலஅவகாசமே உள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தகவல் வெளியிட்டுள்ளது.

அதற்குப் பின்னர், அதிபர் தேர்தலுக்கான அரசிதழ் அறிவிப்பை வெளியிடும் அதிகாரம் தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கே இருப்பதாகவும், செப்ரெம்பர் மாத பிற்பகுதியில் ஆணைக்குழு அந்த அரசிதழ் அறிவிப்பை வெளியிடத் தீர்மானித்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

அதிபர் மைத்திரிபால சிறிசேனவின் பதவிக்காலம் ஜனவரி 9ஆம் நாளுடன் நிறையவுள்ள நிலையில், அதிபர்  தேர்தலை  எதிர்வரும் நொவம்பர் 15 ஆம் நாளுக்கும், டிசெம்பர் 9ஆம் நாளுக்கும் இடையில் – ஒரு சனிக்கிழமை நடத்துவதற்கு, தேர்தல்கள் ஆணைக்குழு தயாராகி வருகிறது.

இதற்கமைய அதிபர்  தேர்தலுக்கான வேட்புமனுவைக் கோரும் அரசிதழ் அறிவித்தலை தேர்தல்கள் ஆணைக்குழுவே வெளியிடும்.

பதவியில் உள்ள  அதிபரின், பதவிக்காலம் நிறைவடையும் நிலையில், தேர்தலுக்கான அரசிதழ் அறிவித்தலை ஆணைக்குழுத் தலைவரே வெளியிடுவார்.

பதவியில் உள்ள  அதிபர்  தனது பதவிக்காலத்தின் நான்கு ஆண்டுகளை நிறைவு செய்த பின்னர், மீண்டும் மக்கள் ஆணையைப் பெற்றுக்கொள்ளத் தீர்மானித்தால், அவர் அரசிதழ் அறிவித்தலை வெளியிட்டு தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு அறிவிக்க வேண்டும்.

அதிபர்  தேர்தலுக்கான நாளை தீர்மானிப்பதற்கும் வேட்புமனுக்களை ஏற்றுக்கொள்ளும் நாளை தீர்மானிப்பதற்கும் தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கே அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.

வேட்புமனுக்களைத் தாக்கல் செய்வதற்கு இரண்டு வாரகால அவகாசம் வழங்கப்படும். வேட்பாளர்கள் தமது பரப்புரை பணிகளை முன்னெடுப்பதற்கு ஐந்து வாரங்கள் ஒதுக்கப்படும்.

தற்போதைய அதிபர் மைத்திரிபால சிறிசேனவின், பதவிக்காலம் 19ஆவது திருத்தத்துக்கு அமைய ஐந்தாண்டுகளாகும். அதன் படி ஜனவரி 9ஆம் நாளுடன் அவரது பதவிக்காலம் நிறைவடைகிறது.

பதவிக்காலம் நிறைவடைவதற்கு இரண்டு மாதங்களுக்கு முன்னரே, தேர்தலுக்கான அரசிதழ் அறிவிப்பு விடுக்கப்பட்டு, டிசம்பர் மாதம் 9ஆம் நாளுக்கு முன்னர் தேர்தல் நடத்தப்படவேண்டும்.

மைத்திரிபால சிறிசேன தனது பதவிக்காலத்தின் நான்கு ஆண்டுகளை நிறைவு செய்துள்ள நிலையில், அடுத்துவரும் 45 நாட்களுக்கிடையில் அவர்    விரும்பினால், மக்களாணையைக் கோரித் தேர்தலுக்குச் செல்ல முடியும்.

இல்லாவிட்டால்,அவரது பதவிக்காலம் முழுமைப்படுத்தப்பட்டதாகக் கருதி செப்டம்பர் இறுதி வாரத்துக்குள் தேர்தல்கள் ஆணைக்குழு அரசிதழ் அறிவித்தலை வெளியிடத் தீர்மானித்திருப்பதாக ஆணைக்குழுத் தலைவர் மகிந்த தேசப்பிரியவை ஆதாரம் காட்டி   ஆணைக்குழு வட்டாரங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *