பிரிகேடியர் உள்ளிட்ட 4 இராணுவத்தினருக்கு எதிராக ட்ரயல் அட் பார் விசாரணை
ரதுபஸ்வெலவில் குடிநீர் கோரிப் போராட்டம் நடத்திய பொதுமக்கள் மீது கண்மூடித்தனமாக நடத்தப்பட்ட தாக்குதல்கள் தொடர்பாக விசாரிக்க, மூன்று நீதியரசர்களைக் கொண்ட ட்ரயல் அட் பார் அமர்வு ஒன்றை நியமிக்குமாறு உச்சநீதிமன்ற தலைமை நீதியரசரிடம், சட்டமா அதிபர் கோரியுள்ளார்.
சிறிலங்கா இராணுவத்தைச் சேர்ந்த பிரிகேடியர் தேசப்பிரிய குணவர்த்தன( தற்போது மேஜர் ஜெனரல்) ஸ்ராவ் சார்ஜன்ட் அருண சிறிசேன, கோப்ரல்கள் திலக ரத்ன, லலித் கபிரே ஆகியோருக்கு எதிராக குற்றவியல் சட்டத்தின் கீழ் வழக்குத் தாக்கல் செய்ய சட்டமா அதிபர் பணித்துள்ளார்.
2013ஆம் ஆண்டு ஓகஸ்ட் 1ஆம் நாள் இடம்பெற்ற சம்பவத்தில் 3 பொதுமக்கள் கொல்லப்பட்டதுடன், 33 பேர் படுகாயம் அடைந்தனர்.
இந்த தாக்குதலுக்கு தலைமை தாங்கிய பிரிகேடியர் தேசப்பிரிய குணவர்த்தன பின்னர் துருக்கிக்கான சிறிலங்கா தூதரகத்தில் பாதுகாப்பு ஆலோசகராக நியமிக்கப்பட்டார்.
பின்னர் மேஜர் ஜெனரலாகவும் தரமுயர்த்தப்பட்டு, பாதுகாப்பு அமைச்சில் பணியில் அமர்த்தப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.