பெங்களூருவில் இந்தியத் தலைவர்களைத் தேடிச் சென்று சந்தித்த மகிந்த
‘தி ஹிந்து’ நாளிதழ் குழுத்தினால் நடத்தப்படும், இரண்டு நாள் கருத்தரங்கில் பங்கேற்க, பெங்களூரு சென்றிருந்த சிறிலங்காவின் எதிர்க்கட்சித் தலைவர் மகிந்த ராஜபக்ச, இந்தியத் தலைவர்களைச் சந்தித்துப் பேசியுள்ளார்.
நேற்று இந்தியாவின் முன்னாள் பிரதமர் தேவகௌடாவையும், கர்நாடக மாநில துணை முதல்வர் பரமேஸ்வரையும், அவர்களின் இல்லங்களுக்குச் சென்று மகிந்த ராஜபக்ச சந்தித்துப் பேச்சு நடத்தினார்.
தேவகௌடாவுடனான சந்திப்பின் போது, விரைவில் இரண்டு நாடுகளிலும் நடைபெறவுள்ள தேர்தல்கள், அரசியல் சூழ்நிலைகள் உள்ளிட்ட விடயங்கள் குறித்து பேசப்பட்டுள்ளது.
அதேவேளை கருத்தரங்கில் இரண்டாவது நாளான இன்று சிறப்புரையாற்ற வந்த இந்தியாவின் துணைக் குடியரசுத் தலைவர் வெங்கய்ய நாயுடுவையும், மகிந்த ராஜபக்ச சந்தித்துப் பேசினார்.
கருத்தரங்கு மண்டபத்தில் இந்தச் சந்திப்பு இடம்பெற்றதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்தச் சந்திப்புகளில், மகிந்த ராஜபக்சவுடன் நாமல் ராஜபக்ச, ஜி.எல்.பீரிஸ், டிலான் பெரேரா, டலஸ் அழகப்பெரும உள்ளிட்டவர்களும் கலந்து கொண்டனர்.