மேலும்

சிறிலங்கா அதிபர் அவசர கூட்டம் – ரணிலை நியமிக்க மறுப்பு

நாடாளுமன்றத்தைக் கலைத்து வெளியிட்ட அரசிதழ் அறிவிப்பு சட்டவிரோதமானது என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்ததை அடுத்து, சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன அவசர கூட்டம் ஒன்றை நடத்தினார்.

அதிபர் செயலகத்தில் நடந்த இந்தக் கூட்டத்தில்  சிறிலங்கா சுதந்திரக் கட்சி மற்றும், சிறிலங்கா பொதுஜன முன்னணி நாடாளுமன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

இதில் மகிந்த ராஜபக்சவும் பங்கேற்றிருந்தார். இந்தக் கூட்டத்தில் எதிர்கால நடவடிக்கைகள் தொடர்பாக ஆலோசனை நடத்தப்பட்டது.

ரணிலுடன் இணைந்து ஆட்சி இல்லை

ரணில் விக்கிரமசிங்கவுடன் இணைந்து மீண்டும் கூட்டு அரசாங்கத்தை அமைக்கமாட்டேன் என்று சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன இந்தக் கூட்டத்தில் கூறினார் என, நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஸ்மன் யாப்பா அபேவர்த்தன தெரிவித்தார்.

சிறிலங்கா அதிபருடன் நடத்திய சந்திப்புக்குப் பின்னர் ஊடகங்களிடம் கருத்து வெளியிட்ட அவர்,

“ மகிந்த ராஜபக்ச மற்றும் அமைச்சர்களுக்கு இடைக்கால தடை உத்தரவு வழங்கிய மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் உத்தரவுக்கு எதிரான மேன்முறையீட்டு மனு தொடர்பாக, உச்சநீதிமன்றம் நாளை இடைக்கால உத்தரவை வழங்கலாம் என்பதால், நாளை மாலை 5 மணிக்குப் பின்னர் கட்சியின் முடிவை அறிவிப்பதாகவும் சிறிலங்கா அதிபர் கூறினார்.

ரணில் விக்கிரமசிங்கவிடம் பாடம் படித்து விட்டதாகவும், அவருடன் கூட்டணி அரசு அமையும் என்ற நம்பிக்கையை எவரும் வைத்துக் கொள்ள வேண்டாம் என்றும் சிறிலங்கா சுதந்திரக் கட்சியினரிடம் அவர் தெரிவித்தார்.

மக்கள் வாக்களிக்கும் வாய்ப்பு தீர்ப்பினால் தடுக்கப்பட்டுள்ளதாகவும் எனினும், நீதிமன்றத் தீர்ப்புக்கு மாறாக செயற்பட முடியாது என்று சிறிலங்கா அதிபர் கூறினார் என்றும், லக்ஸ்மன் யாப்பா அபேவர்த்தன தெரிவித்தார்.

திங்கட்கிழமை புதிய அரசு

இதற்கிடையே, வரும் திங்கட்கிழமை புதிய அரசாங்கம் நியமிக்கப்படும் என்றும், புதிய அமைச்சரவை பதவியேற்கும் என்றும் சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன இன்றைய கூட்டத்தில் கூறினார் என, நாடாளுமன்ற உறுப்பினர் நிசாந்த முத்துஹெட்டிகம தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *