மேலும்

ஆபத்தில் சிறுபான்மையினர் – வெளிநாட்டு தூதுவர்களிடம் சம்பந்தன் தெரிவிப்பு

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் நேற்று 15 நாடுகளின் தூதுவர்கள் மற்றும் இராஜதந்திரிகளைச் சந்தித்து சிறிலங்காவின் தற்போதைய அரசியல் நெருக்கடிகள் தொடர்பாகவும், இது தொடர்பான தமது நிலைப்பாடு குறித்தும் தெளிவுபடுத்தியுள்ளனர்.

எதிர்க்கட்சித் தலைவரின் செயலகத்தில் நேற்று மாலை 4.30 மணிக்கு ஆரம்பித்த இந்தச் சந்திப்பில் இரா.சம்பந்தன் தலைமையிலான 14 நாடாளுமன்ற உறுப்பினர்கள் பங்கேற்றனர்.

சுமார் ஒன்றரை மணி நேரம் நீடித்த இந்தச் சந்திப்பின் போது, தற்போதைய அரசியல் நெருக்கடிக்கு விரைவான தீர்வைக் காண்பதன் அவசியத்தை இரா.சம்பந்தன் வலியுறுத்திக் கூறியுள்ளார்.

கடந்த ஒக்ரோபர் 26ஆம் நாளுக்குப் பின்னரான நிலைமைகளை எடுத்துக் கூறிய இரா.சம்பந்தன், இதனால் தமிழ் மக்கள் உள்ளிட்ட சிறுபான்மையினருக்கு ஏற்படக் கூடிய பாதிப்புகள் குறித்தும் விளக்கமளித்துள்ளார்.

இந்தச் சந்திப்புக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் விளக்கமளித்த இரா.சம்பந்தன்,

”ஒன்றுக்கு இரண்டு முறை நாடாளுமன்றத்தில் 122 உறுப்பினர்கள், நம்பிக்கையில்லா பிரேரணையை நிறைவேற்றிய போதும், பிரதமராக நியமிக்கப்பட்ட மகிந்த ராஜபக்ச தொடர்ந்தும் அதிகாரத்தில் இருக்கிறார்.

அமைச்சர் பதவி, பணம் கொடுத்து நாடாளுமன்ற உறுப்பினர்களை விலைக்கு வாங்கும் குதிரை பேரம் நடந்து கொண்டிருக்கிறது.

புதிய அரசியலமைப்பைக் கொண்டு வருவது, மற்றும் வடக்கு, கிழக்கில் காணிகள் விடுவிப்பு, அரசியல் கைதிகளின் விடுதலை,உள்ளிட்ட விடயங்களில் நாங்கள் கவனம் செலுத்தியிருந்தோம்.

தற்போதைய அரசியல் நிலைமை சிறுபான்மையினரையும் நாட்டையும் பெரும் ஆபத்தில் தள்ளியிருக்கிறது

இந்த நிலைமைகள் தொடர்ந்தால், சட்டம் ஒழுங்கு நிலைமை வீழ்ச்சிகாணும். அதனால், சமூக விரோத சக்திகளின் கை ஓங்கும்.

நாட்டில் சட்டம், ஒழுங்கு நிலை பாதிக்கப்பட்டால், குறிப்பாக சிறுபான்மையினரே மிகவும் பாதிக்கப்படுவார்கள்.” என்று வெளிநாட்டு இராஜதந்திரிகளிடம் கூறியதாக தெரிவித்தார்.

அதற்கு அவர்கள், தம்மால் எதனைச் செய்ய முடியுமோ அதனைச் செய்வதாக உறுதியளித்தனர் என்றும் கூறினார்.

இந்தச் சந்திப்பின் போது, வெளிநாட்டு இராஜதந்திரிகள், தற்போதைய அரசியல் நிலைமைகள் தொடர்பாக பல்வேறு கேள்விகளையும் எழுப்பியிருந்தனர்.

இந்தச் சந்திப்பில், அவுஸ்ரேலியா, நோர்வே, சுவிஸ், கனடா, ஐரோப்பிய ஒன்றியம், ஐ.நா ஆகியவற்றின் தூதுவர்களும், அமெரிக்கா, பிரித்தானியா, தென்கொரியா, இந்தியா, பங்களாதேஷ், ஜேர்மனி, பிரான்ஸ், தென்னாபிரிக்கா, நெதர்லாந்து உள்ளிட்ட நாடுகளின் தூதரகங்களின் உயர்மட்டப் பிரதிநிதிகளும், கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *