மேலும்

மாலைதீவில் சந்திரிகாவுக்கு முக்கியத்துவம் – மோடியையும் சந்திப்பு

மாலைதீவில் புதிய அதிபர் இப்ராகிம் சோலி தலைமையிலான புதிய அரசாங்கம் பதவியேற்கும் நிகழ்வில்- சிறிலங்காவின் முன்னாள் அதிபர் சந்திரிகா குமாரதுங்கவுக்கு கூடுதல் முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது.

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, சந்திரிகா குமாரதுங்க ஆகியோர் இன்று நடந்த மாலைதீவின் புதிய அரசாங்கம் பதவியேற்கும் நிகழ்வில் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்றனர்.

முன்னதாக, சிறிலங்காவின் சர்ச்சைக்குரிய பிரதமர் மகிந்த ராஜபக்ச, இந்த நிகழ்வில் பங்கேற்பார் என்று அவரது தனிப்பட்ட செயலர் கூறியிருந்தார். எனினும் மகிந்த ராஜபக்ச இந்த நிகழ்வில் பங்கேற்கவில்லை.

சிறிலங்காவின் வெளிவிவகார அமைச்சர் சரத் அமுனுகம, மற்றும் அமைச்சர் பைசர் முஸ்தபா மற்றும் நாமல் ராஜபக்ச ஆகியோர் மாத்திரம் கலந்து கொண்டனர்.

இந்த நிகழ்வில் விருந்தினர்களுக்காக போடப்பட்ட ஆசனங்களில் முன்வரிசையில் இந்தியப் பிரதமர் மோடியுடன், முன்னாள் அதிபர் சந்திரிகா மற்றும் மாலைதீவின் முன்னாள் அதிபர்கள் கயூம், நசீட் ஆகியோர் அமர்ந்திருந்தனர்.

இந்த நிகழ்வில் சந்திரிகாவுடன் இந்தியப் பிரதமர் கலந்துரையாடினார்.

சிறிலங்காவின் அரசியல் நெருக்கடிகள் குறித்து சந்திரிகா குமாரதுங்க அண்மையில், காட்டமான அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தார்.

கடந்த மாதம் 26ஆம் நாளுக்குப் பின்னர், இந்தியத் தலைவர்களுடன் சிறிலங்காவின் அரச தலைவர்கள் எவரும் தொடர்பு கொள்ள முடியாத நிலை இருந்து வரும் சூழலில், சிறிலங்கா அரசுக்கு எதிரான நிலைப்பாட்டை வெளியிட்டுள்ள சந்திரிகா குமாரதுங்க இந்தியப் பிரதமருடன் பேசியிருப்பது முக்கியத்துவம் வாய்ந்த விடயமாக கருதப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *