வெறித்துப் போகும் சுதந்திரக் கட்சி கூடாரம் – தொடர்ந்து பாயும் முன்னாள் எம்.பிக்கள்
சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களாக இருந்த மேலும் பலர், நேற்று மாலையும் சிறிலங்கா பொதுஜன முன்னணியில் இணைந்து கொண்டுள்ளனர்.
நேற்றுக்காலை மகிந்த ராஜபக்ச, சிறிலங்கா சுதந்திரக் கட்சியில் இருந்து விலகி, சிறிலங்கா பொதுஜன முன்னணியில் இணைந்து கொண்டார்.
அவருடன் ஒரு தொகுதி முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களும் இணைந்து கொண்டனர்.
நேற்று மாலை வரை, 23 முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிறிலங்கா பொதுஜன முன்னணியில் இணைந்து கொண்டதாக தெரியவருகிறது.
இந்த நிலையில், நேற்று மாலை சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் முக்கிய தலைவர்களான, சுசில் பிரேம ஜெயந்த, ஜோன் செனிவிரத்ன, பீலிக்ஸ் பெரேரா ஆகியோரும், சிறிலங்கா பொதுஜன முன்னணியில் இணைந்து கொண்டனர்.
அத்துடன் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் விமலவீர திசநாயக்கவும், சிறிலங்கா பொதுஜன முன்னணியில் இணைந்து போட்டியிடவுள்ளதாக அறிவித்துள்ளார்.
இதனால், மைத்திரிபால சிறிசேன தலைமையிலான சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் கூடாரம், வெறித்துப் போகும் நிலை ஏற்பட்டுள்ளது.