மேலும்

நாடாளுமன்றக் கலைப்புக்கு சிறிலங்கா அதிபர் கூறும் 3 காரணங்கள்

நாடாளுமன்ற உறுப்பினர்களின் குதிரை பேரம், சபாநாயகரின் எல்லைமீறிய செயற்பாடு, இரத்தக்களரியைத் தடுக்கும் நோக்கிலேயே தாம், நாடாளுமன்றத்தைக் கலைத்திருப்பதாக சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் நேற்றிரவு நாட்டு மக்களுக்கு விளக்க உரை ஒன்றை நிகழ்த்தினார்.

“தற்போதைய அரசியல் நிலைமைகளை தெளிவுபடுத்தும் வகையில் 14 நாட்களுக்குள் இது நான் உங்கள் முன் உரையாற்றும் மூன்றாவது முறையாகும்.

நாடாளுமன்றத்தைக் கலைத்ததற்கான காரணங்களை தெளிவுபடுத்த விரும்புகின்றேன்.

நமது நாட்டில் நாடாளுமன்ற சம்பிரதாயம்  1947 இல் முதலாவது நாடாளுமன்றத்துடன் ஆரம்பமானது. அன்று முதல் இன்று வரை பொதுத் தேர்தல்களுக்கமைய அரசாங்கங்கள் மாற்றப்பட்டு புதிய அரசாங்கங்கள் பதவியேற்று இந்த நாட்டின் அரச நிர்வாகம் முன்னெடுக்கப்பட்டு வந்திருக்கின்றது.

கடந்த வாரமளவில் அரசியல் ரீதியாகவும் சமூக ரீதியாகவும் ஒழுக்கத்தன்மையின் அடிப்படையிலும் நன்னடத்தைமிக்க சமூகத்தை கட்டியெழுப்ப வேண்டிய பொறுப்புமிக்க நாட்டின் உன்னத நிலையும், மக்களின் இறையாண்மையை வெளிப்படுத்தும் மிக உயரிய  இடமுமாகிய நாடாளுமன்ற உறுப்பினர்களின் பெறுமதி – 100 மில்லியன் ரூபா முதல் 150 மில்லியன் ரூபா வரையிலும், சிலவேளைகளில் இன்னும் சில உறுப்பினர்களின் பெறுமதி 500 மில்லியன் ரூபாவாகவும் விலைபோகும் நிலைமை ஏற்பட்டது.

1964 ஆம் ஆண்டு லேக்ஹவுஸ் சட்டத்தை எதிர்க்கும் வகையில் நாடாளுமன்றத்தில் ஏற்பட்ட மாற்றம் இச்சமயம் எனது ஞாபகத்திற்கு வருகின்றது. அதன் மூலம் அரசாங்கத்தில் மாற்றம் ஏற்படுவதற்கும் வழிவகுத்தது.

ஆயினும்19 47 முதல் இதுவரையிலான காலப்பகுதியில் கலைக்கப்பட்ட நாடாளுமன்றங்கள் , ஊழல் காரணமாக கலைக்கப்பட்டதாக அறிவதற்கில்லை.

2015 ஆம் ஆண்டு மத்திய வங்கி கொள்ளை அதன் பின்னர் ஏற்பட்ட பல்வேறு ஊழல்கள், முறைகேடுகள் அவற்றுடன் தொடர்பான விடயங்கள் மற்றும் மகிந்த ராஜபக்சவை  பிரதமராக்கியதை அடுத்து – நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டிய தேவை ஏற்பட்டு அரசியல் நிலைமை சூடுபிடித்த பின்னணியில், நாடாளுமன்ற உறுப்பினர்களின் பெறுமதி நான் ஏற்கனவே குறிப்பிட்டதைப் போல் அவர்களாலேயே நிர்ணயிக்கப்பட்டது. அது மிகவும் வருந்தத்தக்கதோர் நிலைமையாகும்.

உங்களது மதிப்பிற்குரிய வாக்குகளைப் பெற்று இந்த நாடாளுமன்றத்திற்கு வந்திருக்கும் பிரதிநிதிகள் தமது வணிக பெறுமதியை அல்லது ஒரு விலையை நிர்ணயிப்பது எந்தளவிற்கு அரசியல் ரீதியில் மோசமான துரதிஷ்டமான நிலையாகும்.

இதுவே நாடாளுமன்றத்தைக் கலைப்பதற்கு முக்கிய காரணமாக அமைந்தது.

நாடாளுமன்றத்தைக் கலைக்க நேர்ந்த இரண்டாவது காரணி, முன்னாள் சபாநாயகர் கரு ஜயசூரியவின் அதிசயமான செயற்பாடாகும். அவரின் செயற்பாட்டையிட்டு நான் மிகவும் வருந்துகின்றேன். அவர் எனது மிகவும் நெருங்கிய நண்பராவார்.

நம் நாட்டு நாடாளுமன்ற சம்பிரதாயத்தினுள் நியமிக்கப்பட்ட சபாநாயகர்கள் அவர்களது நடுநிலைத் தன்மையையும் பக்கச்சார்பின்மையையும் மிக சிறந்த முறையில் வெளிப்படுத்தி வந்தார்கள். அந்த நிலைமை 1947 முதல் இதுவரை இருந்து வந்தது.

நாடாளுமன்றத்தின் நிலையியற் கட்டளை, நாடாளுமன்றத்தின் சம்பிரதாயம் ஆகியவற்றைப் பொருட்படுத்தாது அதிபருக்குரிய சிறப்பு  அதிகாரங்களுக்கமைய,  பிரதமரை நியமித்ததை ஏற்றுக்கொள்ளாத தன்மையை ஏற்படுத்தி, சபாநாயகரினால் வெளியிடப்பட்ட அறிக்கைகளும் அவரது நடத்தையும் நாடாளுமன்றத்தைக் கலைப்பதற்கான இரண்டாவது காரணமாகும்.

இங்கே அரசியல் ரீதியான ஒரு நிலைமையினை கவனத்தில் கொள்ளும் வகையில் உங்களது ஞாபகத்திற்கு இவ்விடயத்தையும் கொண்டுவர விரும்புகிறேன்.

கடந்த 2015 ஜனவரி 08 ஆம் நாள் நடைபெற்ற தேர்தலின் பின்னர் அதற்கு மறுநாள் அதிபராக  நான் பதிவியேற்ற மறுகணமே  ரணில் விக்ரமசிங்கவை பிரதமர் பதவியில் அமர்த்தினேன். அப்போது நாடாளுமன்ற உறுப்பினர்களில் 225 பேரில் 162 உறுப்பினர்களின் பலம் இருந்த டி.மு.ஜயரத்னவை நீக்கிவிட்டே 41 உறுப்பினர்கள் மாத்திரம் இருந்த ரணில் விக்ரமசிங்கவை பதவியில் அமர்த்தினேன்.

இந்த நிகழ்வு உங்களுக்கு ஞாபகம் இருக்கும் என நான் நினைக்கின்றேன். அச்சமயம் இன்று பலரும் பேசுகின்ற நாடாளுமன்றத்தின் பெரும்பான்மையை பற்றி எவரும் பேசவில்லை என்பதை நீங்களும் அறிவீர்கள்.

பெரும்பாலும் அதிபரினால் நம்பிக்கை வைக்கத்தக்க, நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை நாடாளுமன்ற உறுப்பினர்களின் விருப்பத்தை வெல்லத்தக்க ஒரு நாடாளுமன்ற உறுப்பினரை, அரசியலமைப்பில் காணப்படுகின்ற உடன்படிக்கைகளுக்கு அமைய நியமிப்பதே சம்பிரதாயமாகும்.

அவ்வாறு நியமிக்கப்பட்டதன் பின்னர் நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையை பெற்றுக் கொள்வதற்கான நிலையியற் கட்டளை, அரசியலமைப்பின் சட்ட திட்டங்களின் கீழ் செயற்படுத்தப்படும்.

இருப்பினும் ஒரு பிரதமரை நியமித்து அவர் நாடாளுமன்றத்திற்கு செல்லும் முதல் நாளிலேயே அவர் மீதான நம்பிக்கை இருக்கின்றதா என்பதை பற்றிய பெரும்பான்மையை நிரூபிப்பதற்கான வாக்கெடுப்பு எமது நாடாளுமன்ற சம்பிரதாயத்தில் ஒருபோதும் நடந்ததில்லை.

நிலையியற் கட்டளைகளுக்கு கீழும் அவ்வாறு நடப்பதில்லை. இருப்பினும் நாடாளுமன்றத்தின் அந்தச் சம்பிரதாயத்தை மீறி கரு ஜயசூரிய இரண்டு அறிக்கைகளை வெளியிட்டார்.

அவரது முதலாவது அறிக்கையில் மகிந்த ராஜபக்சவை பிரதமராக ஏற்று அவருக்கான உரிமைகளையும் சிறப்புரிமைகளையும்  நாடாளுமன்றத்தில் பெற்றுத்தருவதாக அறிவித்தார்.

அதாவது நாடாளுமன்றத்தில் பிரதமருக்குரிய ஆசனம், நாடாளுமன்றத்தில் பிரதமருக்கான செயலகம் ஆகியன பெற்றுத்தரப்படும் என முதலாவது அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்த போதிலும், அதற்கு சில நாட்களின் பின்னர் வெளியிட்ட இரண்டாவது அறிக்கை, முதலாவது அறிக்கையை விட முற்றிலும் வேறுபட்டவொரு அறிக்கையாக அமைந்தது.

அதன்மூலம் அவர், முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவை பிரதமராக ஏற்றுக் கொள்வதாக தெரிவித்தார்.  இந்த நிலைமையை கவனத்திற் கொண்டு ஏற்படும் நிலைமையைப் பற்றி நான் மிகுந்த கவனத்தை செலுத்தினேன்.

அத்தோடு இரு தரப்பையும் சார்ந்த உறுப்பினர்களும் அறிக்கைகளை வெளியிட்டார்கள். ஊடகங்களில் பல்வேறு கலந்துரையாடல்கள் இடம்பெற்றன. 14 ஆம் நாள் நாடாளுமன்றம் கூடும் பட்சத்தில் ஒரு பாரிய மோதல் ஏற்படும் எனவும் சில சமயம் சிலர் மரணிக்க நேரிடும் எனவும் சிலர் தெரிவித்தார்கள்.

நாடாளுமன்றத்தைக் கலைக்காமல், 14ஆம் நாள் அதனைக் கூட்டி, அவ்வாறு நடக்க விட்டிருப்பின், அந்த மோதல் உங்களதும் எனதும் அன்புக்குரிய இந்த தாய் நாட்டின் நகரங்களிலும் கிராமங்களிலும் மோதல்கள் ஏற்பட்டு, சாதாரண மக்களுக்கிடையிலான மோதலாக பாரதூரமான நிலைமை ஏற்படுத்தும் என்பதை உணர்ந்தேன்.

ஆகையால் 225 பேருக்கிடையிலான மோதல் நாடு தழுவிய ரீதியிலான பாரிய மோதலாக மாறி இயல்பு நிலை சீர்குலைவதற்கு வழிவகுப்பதற்கு பதிலாக, எனது பொறுப்புக்கும் கடமைக்கும் ஏற்ப ஜனநாயகத்தை மதித்து சுதந்திரமான நியாயமான தேர்தலொன்றின் மூலம் நாடாளுமன்ற உறுப்பினர்களைத் தேர்ந்தெடுப்பதற்கும், 150 இலட்சம் வாக்காளர்களிடம் அவ்வதிகாரத்தை பெற்றுக் கொடுப்பதற்கும் முடிவு செய்தேன்.

அதன்மூலம் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மத்தியில் ஏற்பட்ட ஊழல்மிக்க தன்மையையும், அரசியல் நெருக்கடியையும் தீர்த்துக் கொள்ளக்கூடிய பொறுப்பினை பொதுமக்களிடம் கையளிக்கும்  வகையிலேயே நாடாளுமன்றத்தைக் கலைத்து பொது தேர்தலை நடத்த தீர்மானித்தேன்.

இப்போது ஏற்பட்டிருக்கின்ற இப்பிரச்சினைக்கு தெளிவான நிலையான தீர்வு பொதுத்தேர்தல் மூலம் கிடைக்கப்பெறும்.

பொதுத் தேர்தலை நடத்தும் முழுமையான அதிகாரம் தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கே இருக்கின்றது. ஆதலால் தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு நாம் எமது முழுமையான தேவையைப் பெற்றுக் கொடுக்க வேண்டும்.

தேர்தல் சட்டதிட்டங்களைப் பாதுகாத்து- நாட்டில் தேர்தல் ஆணைக்குழுவினால் ஜனநாயக ரீதியிலான நியாயமான நேர்மையான தேர்தலை நடத்துவதற்கு அனைவரும் ஒத்துழைப்பை தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கும் அரச உத்தியோகத்தர்களுக்கும் பாதுகாப்பு பணிகளில் ஈடுபடும் பொலிஸ் உள்ளிட்ட முப்படையினருக்கும் பெற்றுக் கொடுப்போம் என்ற வேண்டுகோளை விடுக்க விரும்புகின்றேன்.

நாம் ஒரு புதிய அரசாங்கத்தை தேர்ந்தெடுப்போம். அதேபோன்று ஊழல் மிக்கவர்களை அகற்றி அரச நிர்வாகத்திற்காக தூய்மையான நாடாளுமன்ற உறுப்பினர்களை தேர்ந்தெடுப்பது மதிப்புக்குரிய உங்களது பொறுப்பாகும். ”என்று தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *