சிறிலங்காவில் ஜனநாயக நெறிமுறைகள் மதிக்கப்படும் – இந்தியா நம்பிக்கை
சிறிலங்காவில் ஜனநாயக நெறிமுறைகள் மதிக்கப்படும் என்று நம்புவதாக இந்திய வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் தெரிவித்துள்ளார். புதுடெல்லியில் இன்று இந்திய வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் ரவீஷ் குமாரிடம் ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கே அவர் இவ்வாறு பதிலளித்துள்ளார்.
“சிறிலங்காவின் அரசியல் நிலவரங்கள் தொடர்பாக இந்தியா உன்னிப்பாக கண்காணித்து வருகிறது.
அங்கு நிலைமைகள் இன்னமும் தெளிவாகத் தெரியவில்லை. சிறிலங்காவில் ஜனநாயக நெறிமுறைகள் மதிக்கப்படும் என்று நம்புகிறோம்” என அவர் கூறியுள்ளார்.
அதேவேளை, அரசியலமைப்பு நெருக்கடிகளுக்கு மத்தியில், சிறிலங்காவில் வரவிருக்கும் அரசாங்கத்திடம் இந்தியா, தனது மூலோபாய நலன்கள் பாதுகாக்கப்படுவதை எதிர்பார்க்கிறது என்று ‘எக்கொனமிக் ரைம்ஸ்’ தெரிவித்துள்ளது.
குறிப்பாக, சிறிலங்காவில் எந்தவொரு சீன இராணுவத் தளத்துக்கும் இடமளிக்காமல் இருப்பதையும், இந்தியாவின் நிதியில் மேற்கொள்ளப்படும் திட்டங்களை சரியான நேரத்தில் நடைமுறைப்படுத்தப்படுவதையும், இந்தியா எதிர்பார்க்கிறது என்றும் அந்தச் செய்தியில் கூறப்பட்டுள்ளது.