ஏனைய நாடுகளின் கடற்படைகள் பாவித்த கப்பல்கள் நன்றாகவே உள்ளன – சிறிலங்கா கடற்படை
ஏனைய நாடுகளின் கடற்படைகள் பயன்படுத்திய கப்பல்களை நல்ல நிலையிலேயே சிறிலங்கா கடற்படை பெற்றுக் கொள்கிறது என்று சிறிலங்கா கடற்படையின் தலைமை அதிகாரி றியர் அட்மிரல் பியால் டி சில்வா தெரிவித்துள்ளார்.
அமெரிக்கா, சீனா உள்ளிட்ட நாடுகளின் கடற்படைகளின் பயன்பாட்டில் இருந்து நீக்கப்பட்ட கப்பல்களை சிறிலங்கா கடற்படை வாங்கி வருகிறது.
இதுகுறித்து முன்னாள் கடற்படைத் தளபதி அட்மிரல் ஜெயந்த கொலம்பகே, கடுமையாக விமர்சித்திருந்தார்.
இந்த நிலையில், சிறிலங்கா கடற்படையின் தலைமை அதிகாரி, பாவித்து கழிக்கப்பட்ட போர்க்கப்பல்களை தாம் வாங்குவதை நியாயப்படுத்தியுள்ளார்.
“அவை நல்ல நிலையிலேயே வழங்கப்படுகின்றன. அவற்றை சிறிலங்கா கடற்படை நன்றாகவே பயன்படுத்திக் கொள்கிறது.
இவ்வாறான கப்பல்களை அண்மைக்காலத்தில் சிறிலங்கா கடற்படை பல முக்கியமான கடல் நடவடிக்கைகளுக்குப் பயன்படுத்தியிருக்கிறது.
கடந்த ஓகஸ்ட் மாதத்திலும் கூட, பாவித்துக் கழித்த போர்க்கப்பல் ஒன்றை அமெரிக்கா வழங்கியிருந்தது. அடுத்த ஆண்டு இந்தக் கப்பல் சிறிலங்காவுக்கு கொண்டு வரப்படும்.
சிறிலங்கா கடற்படையின் நடவடிக்கைகளில், இந்தக் கப்பல் முக்கியமான பங்கை வகிக்கும்” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.