மேலும்

யாழ்ப்பாணத்தில் நிமலராஜனின் 18 ஆவது நினைவேந்தல் நிகழ்வுகள்

படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் மயில்வாகனம் நிமலராஜனின், 18 ஆவது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வுகள் இன்று யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றன.

2000 ஆம் ஒக்ரோபர் 19ஆம் நாள் இரவு யாழ். கச்சேரியடிப் பகுதியில், உள்ள தனது வீட்டில் ஊடகங்களுக்கு செய்தி எழுதிக் கொண்டிருந்த ஊடகவியலாளர் ம.நிமலராஜன், ஆயுததாரிகளால் துப்பாக்கியால் சுட்டும், குண்டு வீசியும் படுகொலை செய்யப்பட்டார்.

இதுவரை முறையான விசாரணைகள் வழங்கப்பட்டு நீதி வழங்கப்படாத இந்தப் படுகொலையின், 18 ஆவது ஆண்டு நினைவேந்தல், இன்று யாழ்ப்பாணத்தில் இரண்டு இடங்களில் இடம்பெற்றன.

யாழ். பல்கலைக்கழகத்தில் இன்று முற்பகல் நடந்த நிகழ்வில் துணைவேந்தர் பேராசிரியர் விக்னேஸ்வரன், படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் நிமலராஜனின் உருவப்படத்துக்கு நினைவுச்சுடர் ஏற்றி, வணக்கம் செலுத்தினர்.

அதையடுத்து, யாழ். பல்கலைக்கழக விரிவுரையாளர்கள், மாணவர்கள், நிமலராஜனுக்கு வணக்கம் செலுத்தினர்.

அதேவேளை, யாழ். பிரதான வீதியில் அமைந்துள்ள ஊடகவியலாளர்களின் பொது நினைவுச் சின்னத்தில், இன்று பிற்பகல் 3 மணியளவில், நிமலராஜனுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டதை அடுத்து, யாழ். ஊடக அமையத்தில் நினைவேந்தல் நிகழ்வு இடம்பெற்றது.

இந்த நிகழ்வுகளில் ஊடகத்துறையினர், அரசியல் பிரமுகர்கள் பலரும் பங்கேற்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *