மேலும்

சிறிலங்காவுடன் நெருங்கிய ஒத்துழைப்பு – விருப்பம் வெளியிட்ட ரஷ்ய அதிபர்

சிறிலங்காவுடன், நெருக்கமான ஒத்துழைப்பை ஏற்படுத்திக் கொள்வதற்கு,  ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின்  விருப்பம் வெளியிட்டுள்ளார்.

ரஷ்யாவுக்கான, சிறிலங்காவின்  புதிய தூதுவராக நியமிக்கப்பட்ட, கலாநிதி தயான் ஜயதிலக நேற்று கிரெம்ளின் மாளிகையில், ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினைச் சந்தித்து, தமது நியமனம் தொடர்பான ஆவணங்களைக் கையளித்தார்.

இதன் போது, கருத்து வெளியிட்ட ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் ,

“ இலங்கையுடன்  ரஷ்யா, பாரம்பரியமாக நல்லுறவைப் பேணி வருகிறது. அத்துடன், நெருக்கமான மீன்பிடி, விவசாயம் மற்றும் சுற்றுலா உள்ளிட்ட  வணிக, மற்றும் பொருளாதார ஒத்துழைப்பை ஏற்படுத்திக் கொள்வதற்கும் ரஷ்யா விருப்பம் கொண்டுள்ளது.

கடந்த செப்ரெம்பர் மாதம்,  நாங்கள்  கையெழுத்திட்ட இருதரப்பு அரசுகளுக்கு இடையிலான பாதுகாப்பு ஒத்துழைப்பு உடன்பாட்டை இத்தருணத்தில் குறிப்பிட விரும்புகிறேன்.” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

அதேவேளை, ரஷ்யாவில் புதிதாகத் தூதுவர்களாக நியமிக்கப்பட்ட 23 பேர் மத்தியில் உரையாற்றிய விளாடிமிர் புடின்,

“ஐ.நா பாதுகாப்பு சபையின் நிரந்தர உறுப்பு நாடு என்ற அடிப்படையில், நாடுகளின் இறைமை மற்றும் சமத்துவம் ஆகியவற்றை ரஷ்யா மதிக்கிறது .

வேறு நாடொன்றின் உள்விவகாரங்களில் தலையிடுவதில்லை என்ற கொள்கையையும் ரஷ்யா பின்பற்றுகின்றது” என்றும் குறிப்பிட்டார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *