இடைக்கால அரசு அமைக்கும் பேச்சுக்களில் எந்த முன்னேற்றமும் இல்லை – மகிந்தவிடம் கூறிய எஸ்.பி
இடைக்கால அரசாங்கத்தை அமைக்கும் பேச்சுக்களில் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை என்று, சிறிலங்கா சுதந்திரக் கட்சியின், 15 பேர் அணியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.பி.திசநாயக்க தெரிவித்துள்ளார்.
சிறிலங்கா சுதந்திரக் கட்சியின், 15 பேர் அணியினர் மற்றும் கூட்டு எதிரணியின் தலைவர்கள் நேற்று சிறிலங்காவின் முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சவின் இல்லத்தில் நடந்த கூட்டம் ஒன்றில் கலந்து கொண்டனர்.
நேற்றுமுன்தினம், பொதுஜன முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர்களுடன், இடைக்கால அரசாங்கத்தை அமைப்பது தொடர்பாக, கலந்துரையாடல் நடத்தியிருந்த மகிந்த ராஜபக்ச, அதுபற்றி விரிவான பேச்சுக்களை நடத்தவே, நேற்றைய கூட்டத்துக்கு ஒழுங்கு செய்திருந்தார்.
எனினும், இந்தக் கூட்டத்தில், எதிர்பார்க்கப்பட்டது போன்று, சிறிலங்கா சுதந்திரக் கட்சியுடன் இணைந்து இடைக்கால அரசாங்கத்தை அமைப்பது பற்றி ஒன்றும் பெரிதாகப் பேசப்படவில்லை என்று, கூட்டு எதிரணியின் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சித் டி சொய்சா தெரிவித்துள்ளார்.
தற்போதைய அரசாங்கத்தின் எஞ்சியுள்ள 11 மாத பதவிக்காலத்தில், எவ்வாறு அரசியல் ரீதியாக அதனை எதிர்கொள்வது என்றே கலந்துரையாடப்பட்டது.
இடைக்கால அரசாங்கத்தை அமைப்பது தொடர்பாக சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவுடனான பேச்சுக்களில் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை என்று எஸ்.பி.திசநாயக்க இதன்போது தெரிவித்தார்.
இன்று அனைத்து கூட்டு எதிரணி நாடாளுமன்ற உறுப்பினர்களுடனும் நடக்கவுள்ள கூட்டத்தில் இந்த விவகாரம் தொடர்பாக, கலந்துரையாடப்படவுள்ளது.
நேற்றிரவு நடந்த கூட்டத்தில், 15 பேர் அணியைப் பிரதிநிதித்துவம் செய்யும் வகையில், அனுர பிரியதர்சன யாப்பா, சுசில் பிரேம ஜெயந்த, ஜோன் செனிவிரத்ன ஆகியோரும் கலந்து கொண்டனர்.
இந்தக் கூட்டத்தில், இடைக்கால அரசாங்கம் அமைக்கப்படுவதை எதிர்க்கும் விமல் வீரவன்சவும் கலந்து கொள்ளவில்லை.
இதற்கிடையே, கொழும்பில் வோட்டர்எட்ஜ் விடுதியில் நேற்றிரவு நடந்த நிகழ்வு ஒன்றில் சிறிலங்காவின் முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சவும், மைத்திரிபால சிறிசேன அரசாங்கத்தின் முக்கிய அமைச்சர்களில் ஒருவரும், ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் தலைவருமான மகிந்த அமரவீரவும் சந்தித்துக் கொண்டதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன.
வரவேற்பு நிகழ்வு ஒன்றில் மகிந்த ராஜபக்ச, மகிந்த அமரவீர ஆகியோருடன், சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் 15 பேர் அணியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்களான திலங்க சுமதிபால, சுசில் பிரேமஜெயந்த ஆகியோரும், ஒரே மேசையில் அமர்ந்திருந்து கலந்துரையாடியுள்ளனர்.
இதன்போது, மகிந்த ராஜபக்சவும், திலங்க சுமதிபாலவும் நீண்ட நேரம் தனிப்பட்ட உரையாடலில் ஈடுபட்டனர்.
வோட்டர் எட்ஜ் விடுதியில் நடந்த இந்த நிகழ்வில் நாடாளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமச்சந்திரவும், பிரதி அமைச்சர் வீரகுமார திசநாயக்கவும் பங்கேற்றிருந்தனர். எனினும், அவர்கள் மகிந்த ராஜபக்ச வர முன்னதாகவே அங்கிருந்து சென்று விட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.