மகிந்தவுக்கு நியூயோர்க் ரைம்ஸ் விடுத்துள்ள அறிவிப்பு
அம்பாந்தோட்டை துறைமுகம் தொடர்பாக நியூயோர்க் ரைம்ஸ் வெளியிட்ட செய்தி குறித்து, தேவைப்பட்டால் தமது மூத்த ஆசிரியர்களுடன், சிறிலங்காவின் முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்ச தொடர்பு கொள்ள முடியும் என்று, நியூயோர்க் ரைம்ஸ் தெரிவித்துள்ளது.
சிறிலங்காவில் உள்ள தமது ஊடகவியலாளர்களை அச்சுறுத்துவதை விட்டு, நியூயோர்க் ரைம்ஸ் மூத்த ஆசிரியர்களுடன், மகிந்த ராஜபக்ச தொடர்பு கொள்ளலாம் என்று நியூயோர்க் ரைம்ஸ் ஆசிரியர் மைக்கேல் சிலாக்மன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளார்.
“அம்பாந்தோட்டை துறைமுக விவகாரம் தொடர்பாக, கடந்த ஜூன் 26ஆம் நாள் நியூயோர்க் ரைம்ஸ் வெளியிட்ட செய்திக்கு, உதவிப் பங்களிப்புகளை வழங்கிய, இரண்டு ஊடகவியலாளர்களை, மகிந்த ராஜபக்ச சார்புடைய நாடாளுமன்ற உறுப்பினர்கள் பகிரங்கமாக விமர்சித்துள்ளனர்.
ஊடகவியலாளர்களை இவ்வாறு அச்சுறுத்துவது ஏற்றுக்கொள்ளக் கூடியதல்ல. இந்த நடவடிக்கை, விமர்சனங்களை மெனனமாக்கும் வகையிலும், ஊடக சுதந்திரத்தை கட்டுப்படுத்தும் வகையிலும் உள்ளதாகத் தோன்றுகிறது.
எமது மற்றும், ஏனைய ஊடக அமைப்புகளில் பணியாற்றும் ஊடகவியலாளர்களின் பாதுகாப்பை சிறிலங்கா அதிகாரிகள் உறுதிப்படுத்துவார்கள் என்று எதிர்பார்ப்பதாகவும், அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.