மேலும்

மோடி – மைத்திரி அடுத்த மாதம் நேபாளத்தில் முக்கிய பேச்சு?

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியும், சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவும் அடுத்த மாதம் சந்தித்துப் பேச்சு நடத்தும் வாய்ப்புகள் இருப்பதாக, புதுடெல்லி தகவல்கள் தெரிவிக்கின்றன.

பிம்ஸ்ரெக் எனப்படும், பலதுறை தொழில்நுட்ப மற்றும் பொருளாதார ஒத்துழைப்புக்கான, வங்காள விரிகுடா அமைப்பு நாடுகளின், தலைவர்களின் உச்சி மாநாடு வரும் ஓகஸ்ட் 30ஆம், 31ஆம் நாள்களில் நேபாளத்தில் நடைபெறவுள்ளது.

பங்களாதேஸ், இந்தியா, மியான்மார், சிறிலங்கா, தாய்லாந்து, பூட்டான், நேபாளம் ஆகிய ஏழு நாடுகள் அங்கம் வகிக்கும் இந்த பிம்ஸ்ரெக் அமைப்பின் தலைவர்களின் உச்சி மாநாடு கடந்த மார்ச் மாதம் நடைபெறவிருந்தது.

எனினும், நேபாளத்தில் உள்நாட்டு அரசியல் காரணங்களால் இந்த மாநாடு ஓகஸ்ட் 30ஆம் நாளுக்கு பிற்போடப்பட்டது.

இந்த மாநாட்டில், சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்ட, தலைவர்கள் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சிறிலங்கா அதிபரும், இந்தியப் பிரதமரும் இந்த மாநாட்டில், பங்கேற்றால், இருதரப்பு முக்கியத்துவம் வாய்ந்த விவகாரங்கள் குறித்துப் பேச்சுக்களை நடத்தும் வாய்ப்புகள் இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்தியாவிலும், சிறிலங்காவிலும், அடுத்த ஆண்டு ஆட்சியைத் தீர்மானிக்கும் முக்கியமான தேர்தல்கள் நடைபெறவுள்ள நிலையில், இந்தச் சந்திப்பில் முக்கிய விவகாரங்கள் குறித்து பேச்சுக்கள் நடத்தப்படலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *