மேலும்

உதயங்க வீரதுங்கவை விடுவித்தது அனைத்துலக காவல்துறை?

udayanga-weeratungaடுபாயில் அனைத்துலக காவல்துறையினரால் கைது செய்யப்பட்ட ரஷ்யாவுக்கான சிறிலங்காவின் முன்னாள் தூதுவர் உதயங்க வீரதுங்க, விடுதலைச் செய்யப்பட்டுள்ளார். இந்த தகவலை தனது முகநூல் பதிவு ஒன்றில் உதயங்க வீரதுங்கவே வெளியிட்டுள்ளார்.

அமெரிக்கா செல்லும் வழியில் கடந்த 4ஆம் நாள், டுபாயில் தடுத்து வைக்கப்பட்டு அனைத்துலக காவல்துறையினர் விசாரணை நடத்தியதாக  உதயங்க வீரதுங்க, அதில் கூறியுள்ளார்.

எனினும், தனக்கு எதிராக அனைத்துலக அளவில் எந்தக் குற்றச்சாட்டும் முன்வைக்கப்படாத நிலையைப் புரிந்து கொண்டும், தனக்கு எதிராக சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்படாததாலும், தாம் விடுவிக்கப்பட்டு விட்டதாக உதயங்க வீரதுங்க தெரிவித்துள்ளார்.

இப்போதைய நிலையில் சிறிலங்கா திரும்பும் எண்ணம் தமக்கு இல்லை என்றும், தம் மீதான குற்றச்சாட்டுகள் பொய்யானவை என்றும் அவர் கூறியுள்ளார்.

அதேவேளை, இந்த முகநூல் பதிவு தொடர்பாக தம்மால் கருத்து எதையும் வெளியிட முடியாது என்று சிறிலங்கா காவல்துறை பேச்சாளர் ருவான் குணசேகர தெரிவித்துள்ளார்.

உதயங்க வீரதுங்கவை நாடுகடத்தும் சாத்தியம் தொடர்பாக, சிறிலங்காவில் இருந்து சென்ற அதிகாரிகள் குழு டுபாயில் பேச்சுக்களை நடத்தி வருவதாகவும் அவர் கூறியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *