பூகோள கடல்சார் மையமாக அம்பாந்தோட்டையை மாற்றுவதே தமது இலக்கு என்கிறது சீன நிறுவனம்
பூகோள கடல்சார் மையமாக அம்பாந்தோட்டைத் துறைமுகத்தைக் கட்டியெழுப்புவதே, தமது நோக்கம் என்று சீனாவின் மேர்ச்சன்ட் போர்ட்ஸ் ஹோல்டிங்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.
அம்பாந்தோட்டை துறைமுகத்தை கூட்டு முயற்சியாக அபிவிருத்தி செய்வது தொடர்பாக, சீனாவின் மேர்ச்சன்ட் போர்ட்ஸ் ஹோல்டிங்ஸ் நிறுவனம் கடந்த ஜூலை மாதம், சிறிலங்காவின் துறைமுக அதிகாரசபையுடன் உடன்பாடு செய்து கொண்டது.
சிறிலங்காவில் நடைமுறைப்படுத்தப்படும் மிகப்பெரிய நேரடி வெளிநாட்டு முதலீட்டுத் திட்டம் இதுவாகும்.
கொழும்பில் நேற்று சிறிலங்கா வர்த்தக சம்மேளனத்தில் அம்பாந்தோட்டை துறைமுக உடன்பாடு குறித்து, சீனாவின் மேர்ச்சன்ட் போர்ட்ஸ் ஹோல்டிங்ஸ் நிறுவனத்தின் பிரதி பொது முகாமையாளர் ஹங் தியன் தெளிவுபடுத்தினார்.
“அண்டை நாடுகளையும் உலகின் ஏனைய பகுதிகளையும் இணைக்கும் ஒரு பிரதான மையமாக அம்பாந்தோட்டை துறைமுகத்தை மாற்றுவதற்கு நாம் இலக்கு வைத்துள்ளோம்.
இது சிறிலங்காவின் தேசிய நோக்கு. இதனைச் செயற்படுத்தும் பணியே எம்முடையது. சிறிலங்காவின் நோக்கிற்கு பங்களிப்பதே எமது நோக்கம்.
எம்மால் புதிய முதலீட்டை, புதிய முகாமைத்துவ முறைமையை, சீன மேர்சன்ட் போர்ட்ஸ் நிறுவனத்தின் பூகோள வலையமைப்பின் மூலம், புதிய தொழில்நுட்பத்தைக் கொண்டு வரமுடியும். இந்த கூட்டு முயற்சி வெற்றி பெறுவதற்கு உள்ளூர் முதலீட்டாளர்களும் எம்முடன் இணைந்து கொள்ள வேண்டும்.
சிறிலங்காவின் கடல்சார் தொழில்நுறை மற்றும் பொருளாதார மாற்றங்களில் அம்பாந்தோட்டைத் துறைமுகத்துக்கு முக்கியமான பங்காற்றும் வாய்ப்பு இருப்பதாக நாம் நம்புகிறோம்.
கொழும்புத் துறைமுகத்தை விடவும் பிரதான கடல் பாதைகளுக்கு நெருக்கமாக, அம்பாந்தோட்டை துறைமுகம், அமைந்துள்ளது. இது குறைவான அபிவிருத்தி அடைந்த பகுதியாகவும் இருக்கிறது.
இதனால், நன்றாகத் திட்டமிட்டு, திறமையாக செயற்படுத்தினால் நீண்டகாலத்துக்கு இந்த துறைமுகத்தை நிச்சயமாக செயற்படுத்துவதற்கு அதிக வாய்ப்புகள் உள்ளன. ” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
சிறந்த சேவை தொடரட்டும்