20 ஆவது திருத்தச்சட்ட வரைவைக் கைவிடுகிறது சிறிலங்கா அரசு – டிசெம்பரில் தேர்தல்?
சிறிலங்கா அரசாங்கத்தினால் முன்வைக்கப்பட்டுள்ள 20 வது திருத்தச்சட்ட வரைவு மீது வரும் 19ஆம் நாள் நடத்தப்படவிருந்த விவாதம் காலவரையின்றி பிற்போடப்பட்டுள்ளதாக, மூத்த அமைச்சர்களை மேற்கோள்காட்டி கொழும்பு ஆங்கில நாளிதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன நியூயோர்க்கில் இருந்து திரும்பும் வரை 20 ஆவது திருத்தச்சட்ட வரைவு மீதான விவாதம் பிற்போடப்படவுள்ளதாக, சிறிலங்கா அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்தார்.
“திட்டமிட்டவாறு புதன்கிழமை 20 ஆவது திருத்தச்சட்ட வரைவு மீதான விவாதம் நடத்தப்படாது. சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன, வரும் 24ஆம் நாள் நியூயோர்க்கில் இருந்து திரும்பும் வரை காத்திருப்போம். அதன்பின்னர் முடிவுகள் எடுக்கப்படும்” என்று அவர் தெரிவித்துள்ளார்.
அதேவேளை, இந்த விவகாரம் தொடர்பாக, ஐதேகவின் உயர்மட்டக் கூட்டம் இன்று நடத்தப்படவுள்ளதாக, அமைச்சர் கயந்த கருணாதிலக கூறியுள்ளார்.
இதனிடையே, அமெரிக்காவுக்குப் புறப்பட முன்னர், சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன, தமது கட்சி உறுப்பினர்களை தேர்தலுக்கு தயாராகுமாறு தெரிவித்துள்ளார்.
20 ஆவது திருத்தச்சட்ட வரைவு தொடர்பாக பொதுவாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பு அளித்திருப்பதாக கூறப்படும் நிலையிலேயே, சிறிலங்கா அரசாங்கம் நெருக்கடிக்குள் தள்ளப்பட்டுள்ளது.
உச்சநீதிமன்றத்தின் இந்த தீர்ப்பு நாளையே நாடாளுமன்றத்தில் அறிவிக்கப்படும்.
பொது வாக்கெடுப்பு உடனடியாக நடத்தப்படும் சாத்தியங்கள் இல்லாததால், செப்ரெம்பர் 30ஆம் நாளுடன் காலாவதியாகும், 3 மாகாணசபைகளுக்கான தேர்தலை நடத்த வேண்டிய நிலை சிறிலங்கா அரசாங்கத்துக்கு ஏற்பட்டுள்ளது.
20 ஆவது திருத்தச்சட்ட வரைவு நிறைவேற்றப்படாவிடின், மாகாணசபைகளின் பதவிக்காலம் காலாவதியாகி ஒரு வாரத்துக்குள் தேர்தல் அறிவிப்பு வெளியிடப்பட வேண்டும்.
இதன்படி, டிசெம்பர் 9ஆம் நாள், தேர்தலை நடத்த வாய்ப்புள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தலைவர் மகிந்த தேசப்பிரிய தெரிவித்திருந்தார்.
இதற்கிடையே, 20 ஆவது திருத்தச்சட்ட வரைவை கைவிடுவதற்கு சிறிலங்கா அரசாங்கம் முடிவு செய்திருப்பதாக மற்றொரு ஆங்கில நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.