சிறிலங்கா அதிபரின் சகோதரர் சிறையில் அடைப்பு
பொலன்னறுவவில் விபத்து ஒன்றை ஏற்படுத்தி, இரண்டு பேர் உயிரிழக்கக் காரணமாக இருந்த சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவின் சகோதரர் லால் சிறிசேன, கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
பொலன்னறுவ- ஹிங்குராகொட வீதியில் எதுமல்பிட்டிய என்ற இடத்தில் நேற்று பிற்பகல் 1.10 மணியளவில், லால் சிறிசேன ஓட்டிச் சென்ற லான்ட் குரூசர் வாகனம், உந்துருளி ஒன்றை மோதித் தள்ளியது. இந்த விபத்தில் உந்துருளியில் பயணம் செய்த சகோதரர்களான இருவர் உயிரிழந்தனர்.
விபத்தை ஏற்படுத்திய, லால் சிறிசேன, அந்த இடத்தில் நிற்காமல் தப்பிச் சென்று, சில மணிநேரம் கழித்து, காவல் நிலையத்தில் சரணடைந்தார்.
இதையடுத்து, அவரை பொலன்னறுவ பதில் நீதிவான் முன் நிறுத்தியபோது, அவரை செப்ரெம்பர் 11ஆம் நாள் வரை விளக்கமறியலில் வைக்க நீதிவான் உத்தரவிட்டார்.
மைத்திரிபால சிறிசேனவின் சகோதரரான லால் சிறிசேன, பொலன்னறுவவில் மிகவும் பிரபலமான வர்த்தகராவார். இவர், 140 கி.மீ வேகத்தில் செலுத்திச் சென்ற வாகனமே விபத்தை ஏற்படுத்தியுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.