இராணுவத் தேவைக்குப் பயன்படுத்தக் கூடாது – இந்தியாவுக்கு சிறிலங்கா நிபந்தனை
மத்தல விமான நிலையத்தை இராணுவத் தேவைகளுக்குப் பயன்படுத்தக் கூடாது என்ற முக்கியமான நிபந்தனையை இந்தியாவிடம் சிறிலங்கா முன்வைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
மத்தல விமான நிலையத்தை இந்திய நிறுவனம் ஒன்றுக்கு குத்தகை அடிப்படையில் வழங்கும் கூட்டு முயற்சி உடன்பாடு ஒன்றைச் செய்து கொள்வதற்கான பேச்சுக்கள், இரண்டு நாடுகளுக்கும் இடையில் நடத்தப்பட்டு வருகின்றன.
இந்த நிலையில், மத்தல விமான நிலையம் தொடர்பாக இந்தியாவுடன் செய்து கொள்ளத் திட்டமிடப்பட்டுள்ள உடன்பாட்டில், இந்த விமான நிலையத்தை இராணுவத் தேவைகளுக்குப் பயன்படுத்தக் கூடாது என்ற நிபந்தனை உள்ளடக்கப்பட்டிருக்கும் என்று சிறிலங்காவின் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சின் செயலர் நிகால் சோமவீர தெரிவித்துள்ளார்.
அத்துடன், “விமானப் போக்குவரத்து கட்டுப்பாட்டுக் கோபுரத்தையும் சிறிலங்காவே நிர்வகிக்கும்.
மத்தல விமான நிலையத்தின் 70 வீத உரிமையை தமக்கு வழங்குமாறு இந்தியா கேட்டுக் கொண்டுள்ளது. எனினும், தமக்கு கூட்டு முயற்சி நிறுவனத்தில் 40 வீத உரிமை இருக்க வேண்டும் என்று சிறிலங்கா அரசாங்கம் வலியுறுத்தியுள்ளது.
அத்துடன், இந்த உடன்பாடு 40 ஆண்டுகளுக்கு நடைமுறையில் இருக்கும் என்றும், அதன் பிறகு, தேவைப்பட்டால் இரண்டு தரப்புகளும் இணைந்து நீடித்துக் கொள்ளலாம் என்றும் இந்தியா யோசனையை முன்வைத்துள்ளதாகவும் அவர் கூறினார்.
மத்தல விமான நிலைய உடன்பாடு வரும் டிசெம்பர் மாதத்துக்குள் நிறைவு செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதில், இரண்டு முக்கிய நிபந்தனைகள் உள்ளடக்கப்படும்.
அம்பாந்தோட்டை துறைமுகம் தொடர்பாக சீன நிறுவனத்துடன் செய்து கொண்ட உடன்பாட்டை ஒத்த விதிமுறைகளை இந்த உடன்பாட்டிலும் சிறிலங்கா சேர்த்துக் கொள்ளவுள்ளது.