பெற்றோலிய ஊழியர்களின் போராட்டம் இடைநிறுத்தம் – விலகியது சிறிலங்கா இராணுவம்
சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவுடன் நேற்று மாலை நடத்தப்பட்ட பேச்சுக்களை அடுத்து பெற்றோலிய ஊழியர் தொழிற்சங்கங்கள், தமது போராட்டத்தை வரும் ஓகஸ்ட் 01ஆம் நாள் வரை இடைநிறுத்தியுள்ளன.
அத்துடன், மேலதிக பேச்சுக்கள் நடைபெறும் வரையில், எரிபொருள் விநியோகப் பணிகளை தொடர்ந்து முன்னெடுக்கவும் தொழிற்சங்கங்கள் இணங்கியிருக்கின்றன.
மூன்று கோரிக்கைகளை முன்வைத்து நேற்று முன்தினம் பெற்றோலிய ஊழியர்கள் போராட்டத்தில் குதித்ததை அடுத்து நாடெங்கும் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்பட்டது. இதனால் விமான சேவை மற்றும் மின்விநியோகங்கள் தடைப்படும் ஆபத்தும் தோன்றியது.
இந்த நிலையில், நேற்றுமுன்தினம் நள்ளிரவில், பெற்றோலிய விநியோகத்தை அத்தியாவசிய சேவையாக பிரகடனம் செய்த சிறிலங்கா அதிபர், சிறிலங்கா இராணுவம் மற்றும் சிறப்பு அதிரடிப்படையினரை, எரிபொருள் விநியோகத்தை சீர்படுத்துமாறு உத்தரவிட்டார்.
சிறிலங்கா அதிபருடனான பேச்சுக்களின் போது, பெற்றோலிய ஊழியர்கள் பணிக்குத் திரும்ப இணக்கம் தெரிவித்துள்ளதை அடுத்து, கொலன்னாவ மற்றும் முத்துராஜவெல எண்ணெய் களஞ்சியங்களில் இருந்து நேற்று மாலையில் சிறிலங்கா இராணுவத்தினர் விலக்கிக் கொள்ளப்பட்டுள்ளனர் – சிறிலங்கா இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் ரொஷான் செனிவிரத்ன
இதையடுத்து. கொலன்னாவ, முத்துராஜவெல எரிபொருள் களஞ்சியங்களை கட்டுப்பாட்டில் எடுத்துக் கொண்ட சிறிலங்கா இராணுவம் நேற்று பிற்பகலில் இருந்து விநியோகப் பணிகளை மேற்கொள்ளத் தொடங்கியது.
இந்த நிலையில், சிறிலங்கா அதிபருடன் தொழிற்சங்கத் தலைவர்கள் பேச்சுக்களை நடத்தியதை அடுத்து, வரும் ஓகஸ்ட் 1ஆம் நாள் வரை போராட்டத்தை இடைநிறுத்த முடிவெடுக்கப்பட்டுள்ளது.