சிறிலங்கா இராணுவத் இராணுவத் தலைமை அதிகாரியாக மேஜர் ஜெனரல் அமால் கருணாசேகர நியமனம்
சிறிலங்கா இராணுவத்தின் இராணுவத் தலைமை அதிகாரியாக (Chief of Staff) மேஜர் ஜெனரல் அமால் கருணாசேகர நியமிக்கப்பட்டுள்ளார். சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவின் அனுமதியுடன், சிறிலங்கா இராணுவத் தளபதி லெப்.ஜெனரல் மகேஸ் சேனநாயக்கவினால் நேற்றுமாலை இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது.
இவர் சபுகஸ்கந்தவில் உள்ள பாதுகாப்புச் சேவைகள் கட்டளை மற்றும் அதிகாரிகள் கல்லூரியின் தளபதியாகப் பணியாற்றி வந்த நிலையில், இராணுவத் தலைமை அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார்.
சிறிலங்கா இராணுவத் தளபதிக்கு அடுத்த, இரண்டாவது நிலைப் பதவி இதுவாகும், இந்தப் பதவியில் இருந்த லெப்.ஜெனரல் மகேஸ் சேனநாயக்க இம்மாத தொடக்கத்தில் இராணுவத் தளபதியாக நியமிக்கப்பட்டிருந்தார்.
இதையடுத்தே, மேஜர் ஜெனரல் அமால் கருணாசேகர இந்தப் பதவிக்கு நியமிக்கப்பட்டுள்ளார்.
இலகு காலாட்படைப் பிரிவைச் சேர்ந்த மேஜர் ஜெனரல் அமால் கருணாசேகர, 1981ஆம் ஆண்டு சிறிலங்கா இராணுவத்தில் இணைந்து கொண்டவர்.
மேஜர் ஜெனரல் அமால் கருணாசேகர சிறிலங்கா இராணுவப் புலனாய்வுப் பணிப்பாளராகவும், இராணுவ செயலராகவும், காலாட்படைகளின் தளபதியாகவும், கிளிநொச்சி படைகளின் தலைமையக கட்டளை தளபதியாகவும், 53 ஆவது டிவிசனின் கட்டளை அதிகாரியாகவும் பணியாற்றிய அனுபவமுள்ளவராவார்.