யாழ்ப்பாணத்தில் சிங்கப்பூர் வெளிவிவகார அமைச்சர் – பல்வேறு நிகழ்வுகள், சந்திப்புகளில் பங்கேற்றார்
சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொண்டுள்ள சிங்கப்பூர் வெளிவிவகார அமைச்சர் விவியன் பாலகிருஸ்ணன், நேற்று யாழ்ப்பாணத்தில் மேற்கொண்டு, பல்வேறு நிகழ்வுகளில் பங்கேற்றார்.
யாழ்ப்பாணத்தில் வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் மற்றும் வடக்கு மாகாண ஆளுனர் ரெஜினோல்ட் குரே ஆகியோரை சிங்கப்பூர் வெளிவிவகார அமைச்சர் விவியன் பாலகிருஸ்ணன், நேற்று சந்தித்துப் பேச்சு நடத்தினார்.
இந்தச் சந்திப்புகள் குறித்து கருத்து வெளியிட்டுள்ள சிங்கப்பூர் வெளிவிவகார அமைச்சர் விவியன் பாலகிருஸ்ணன்,
“சிங்கப்பூருக்கு யாழ்ப்பாணம் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. இரண்டு இடங்களுக்கும் இடையில் வலுவான கலாசார மற்றும் மக்களுக்கிடையிலான உறவுகள் உள்ளன.
ஆரம்பகால அரசாங்கம் நிர்வாகிகள் தொடக்கம், தற்போதைய, சிங்கப்பூர் இலங்கைத் தமிழர் சங்கம் போன்ற அமைப்புகள் வரை, யாழ்ப்பாணத்துக்கும் சிங்கப்பூருக்கும் இடையில் வலுவான உறவுகள் இருக்கின்றன.
அரசியல், கல்வி, மற்றும் மருத்துவத்துறைகளில் எமது முன்னோடித் தலைவர்களாக இருந்த பலர் யாழ்ப்பாணத்தில் இருந்து வந்தவர்கள் தான்.
இன்று நாம் அந்த உறவுகளை வலுப்படுத்திக் கொள்வதற்காக யாழ்ப்பாணத்துக்கு வந்திருக்கிறோம்.” என்றும் அவர் கூறினார்.
யாழ். பொதுநூலகத்துக்கு ஒரு தொகுதி நூல்களை அன்பளிப்புச் செய்த சிங்கப்பூர் வெளிவிவகார அமைச்சர், யாழ். போதனா மருத்துவமனைக்கும் சென்று அங்குள்ள வசதிகளை பார்வையிட்டார்.
யாழ். பல்கலைக்கழக மருத்துவபீடத்தில் எலும்பியல் அபிவிருத்தித் திட்டத்தை ஆரம்பித்து வைக்கும் நிகழ்விலும் அவர் பங்கேற்றிருந்தார்.
தாம் மருத்துவ மாணவனாக இருந்த போது யாழ்ப்பாணத்தை சேர்ந்த மிகச் சிறந்த மருத்துவர்களிடம் கற்கின்ற வாய்ப்புக் கிடைத்தது என்றும் இப்போது யாழ்ப்பாணத்தின் சுகாதார நிலையை முன்னேற்றுவதற்கு பங்களிப்பு செய்வது மகிழ்ச்சியளிப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.