போட்டுக் கொடுத்தார் அட்மிரல் கரன்னகொட – சிறிலங்கா கடற்படை அதிகாரிகள் பலர் விரைவில் கைது
சிறிலங்காவின் முன்னாள் கடற்படைத் தளபதி அட்மிரல் வசந்த கரன்னகொட வழங்கிய தகவல்களின் அடிப்படையில், சிறிலங்கா கடற்படையைச் சேர்ந்த மேலும் பலர் அடுத்து வரும் வாரங்களில் கைது செய்யப்படுவர் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கொழும்பு ஆங்கில வாரஇதழ் ஒன்று இந்தச் செய்தியை வெளியிட்டுள்ளது.
2008-2009 ஆம் ஆண்டு காலப்பகுதியில் 11 தமிழர்கள் கடத்தப்பட்டு காணாமல் போகச் செய்யப்பட்டமை தொடர்பாக, சிறிலங்கா கடற்படையின் முன்னாள் ஊடகப் பேச்சாளரான கொமடோர் டி.கே.பி.தசநாயக்க குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டு, ஜூலை 19ஆம் நாள் விரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
இளைஞர்கள் பலர் காணாமல் போகச் செய்யப்பட்ட சம்பவங்களில் சிறிலங்கா கடற்படை அதிகாரிகள் பலர் தொடர்புபட்டிருப்பது குறித்து, கொமடோர் டி.கே.பி.தசநாயக்கவிடம், குற்றப் புலனாய்வுப் பிரிவினர், 2015ஆம்ஆண்டு விசாரணை நடத்தியிருந்தனர்.
அவேளை, கடந்த ஆண்டு சிறிலங்கா கடற்படையின் முன்னாள் தளபதி அட்மிரல் வசந்த கரன்னகொட, குற்றப் புலனாய்வுப் பிரிவிடம், இந்தக ஆட்கடத்தல்கள் தொடர்பாக வாக்குமூலம் அளித்திருந்தார்.
அட்மிரல் வசந்த கரன்னகொட அளித்த தகவல்களின் படி, மேலும் பலர் கைது செய்யப்படக் கூடும் என்று குற்றப் புலனாய்வுப் பிரிவு வட்டாரங்கள் தெரிவித்தன.