3000 மில்லியன் ரூபா மோசடி – மகிந்தவுடன் இணைந்து விசாரணைக்கு வந்த தினேஸ்
முன்னைய ஆட்சிக்காலத்தில் குடிநீர் விநியோகத் திட்டத்தில் 3000 மில்லியன் ரூபா மோசடி செய்யப்பட்டதாக கூறப்படும் குற்றச்சாட்டுத் தொடர்பாக, அப்போதைய நீர்வழங்கல், வடிகால் அமைப்பு அமைச்சரும், கூட்டு எதிரணியின் நாடாளுமன்ற உறுப்பினருமான தினேஸ் குணவர்த்தனவிடம், நேற்று இரண்டரை மணிநேரம் விசாரணை நடத்தப்பட்டது.
பாரிய ஊழல்கள் மற்றும் மோசடிகள், முறைகேடுகள் குறித்து விசாரிக்கும் அதிபர் ஆணைக்குழு முன்பாக நேற்றுக்காலை 10 மணியளவில் முன்னிலையான, தினேஸ் குணவர்த்தனவிடம், பிற்பகல் 12.30 மணி வரை விசாரணை நடத்தப்பட்டது.
இந்த விசாரணையின் போது, தினேஸ் குணவர்த்தனவுடன், சிறிலங்காவின் முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்சவும், இருந்தார்.
அம்பாறை மாவட்டத்தில் 6000 மில்லியன் ரூபா செலவிலான குடிநீர் விநியோகத் திட்டத்தில், 3000 மில்லியன் ரூபா மோசடி செய்யப்பட்டுள்ளதாக ஆணைக் குழுவிடம் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
அந்தக் காலகட்டத்தில், தேசிய நீர்விநியோக மற்றும் வடிகாலமைப்பு சபையின் தலைவராக இருந்த, முன்னாள் பாதுகாப்புச் செயலர் கருணாசேன ஹெற்றியாராச்சியிடமும், ஆணைக்குழு வாக்குமூலம் பெற்றிருக்கிறது.