மேலும் 9 இரட்டைக் குடியுரிமை நாடாளுமன்ற உறுப்பினர்கள் – உதய கம்மன்பில
சிறிலங்கா நாடாளுமன்றத்தில் மேலும் 9 இரட்டைக் குடியுரிமை கொண்ட உறுப்பினர்கள் அங்கம் வகிப்பதாகவும், அவர்களின் பெயர்களை அம்பலப்படுத்தப் போவதாகவும், கூட்டு எதிரணியின் நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் காலி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கீதா குமாரசிங்க சுவிஸ் நாட்டின் குடியுரிமையைக் கொண்டவர் என்பதால், அவர் நாடாளுமன்ற உறுப்பினராகப் பதவி வகிக்கத் தகைமையற்றவர் என்று நீதிமன்றம் தீர்ப்பளித்திருந்தது. இதற்கு எதிராக அவர் மேல்முறையீடு செய்துள்ளார்.
இந்த நிலையில், சிறிலங்கா நாடாளுமன்றத்தில் மேலும் சில இரட்டைக் குடியுரிமை கொண்ட உறுப்பினர்கள் இருப்பதாக சர்ச்சைகள் எழுந்துள்ளன.
இந்த நிலையிலேயே, மேலும் 9 இரட்டைக் குடியுரிமை உறுப்பினர்கள் நாடாளுமன்றத்தில் அங்கம் வகிப்பதாக உதய கம்மன்பில கூறியுள்ளார்.
அவர்களில் அமைச்சர் ஒருவர், சுவிஸ் குடியுரிமையைப் பெற்றவர் என்றும், ஐவர் கனடிய குடியுரிமை கொண்டவர்கள் என்றும், இருவர் நோர்வேஜிய குடியுரிமையையும், ஒருவர் ஜேர்மன் குடியுரிமையையும் கொண்டவர்கள் என்றும் உதய கம்மன்பில குறிப்பிட்டார்.
இவர்களின் பெயர்களை விரைவில் வெளியிடவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.