அமெரிக்க சிறப்புப் படைப்பிரிவினால் சிறிலங்கா கடற்படைக்கு பயிற்சி
அமெரிக்க இராணுவத்தின் சிறப்புப் படைப் பிரிவினால், சிறிலங்கா கடற்படையினருக்கு திருகோணமலையில் வைத்து சிறப்புப் பயிற்சிகள் அளிக்கப்பட்டுள்ளன. கூட்டு ஒருங்கிணைந்த பரிவர்த்தனை பயிற்சித் திட்டத்தின் கீழ் பலன்ஸ் ஸ்ரைல் 2017/1 என்ற பெயரில் இந்தப் பயிற்சிகள் வழங்கப்பட்டுள்ளன.
சிறிலங்கா கடற்படையின் 4 ஆவது அதிவேக தாக்குதல் படையணியைச் சேர்ந்த 12 கடற்படையினருக்கும், சிறப்பு படகுப் படையணியைச் சேர்ந்த 24 கடற்படையினருக்குமே இந்தப் பயிற்சிகள் அளிக்கப்பட்டுள்ளன.
கடந்த ஏப்ரல் மாதம் 24ஆம் நாள் தொடக்கம், ஜூன் 2ஆம் நாள் வரை இந்தப் பயிற்சிகள் வழங்கப்பட்டுள்ளன.
திருகோணமலை டொக்யார்ட் தளத்தில் கடந்த 2ஆம் நாள் நடந்த நிகழ்வில் பயிற்சியை முடித்த கடற்படையினருக்கான சான்றிதழ்கள் வழங்கும் நிகழ்வு இடம்பெற்றது.
இதில், சிறிலங்கா கடற்படையின் கிழக்குப் பிராந்திய தளபதி றியர் அட்மிரல் ட்ராவிஸ் சின்னையா, அமெரிக்க சிறப்புப் படைகளின் நடவடிக்கைப் பிரிவின் தலைமை ஸ்ராவ் சார்ஜன்ட் பிலிப் ஆகியோர் கலந்து கொண்டு சான்றிதழ்களை வழங்கினர்.