33 ஆண்டுகளுக்குப் பின்னர் வடக்கில் மீண்டும் ஆரம்பிக்கப்படுகிறது சுங்கப் பணியகம்
33 ஆண்டுகளுக்குப் பின்னர் வடக்கில் சிறிலங்கா சுங்கத் திணைக்களத்தின் செயற்பாடுகள் இந்த மாதம் தொடக்கம் ஆரம்பிக்கப்படவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
காங்கேசன்துறையில் சுங்கத் திணைக்களத்தின் பணியகம் ஒன்று இந்த மாதம் திறந்து வைக்கப்படவுள்ளது.
வடக்கில் ஆயுதப் போர் ஆரம்பித்த பின்னர் சுங்கத் திணைக்களத்தின் செயற்பாடுகள் முற்றாக முடங்கியிருந்தன.
போர் முடிவுக்கு வந்து எட்டு ஆண்டுகளாகியுள்ள நிலையில், வடக்கில் அதிகளவு கடத்தல் நடவடிக்கைகள் இடம்பெறுவதை கருத்தில் கொண்டு காங்கேசன்துறையில் மீண்டும் தமது பணியகத்தை திறக்க சுங்கத் திணைக்களம் முடிவு செய்துள்ளது.
முன்னர், வடக்கில் யாழ்ப்பாணம், ஊர்காவற்றுறை, காங்கேசன்துறை, வல்வெட்டித்துறை, பருத்தித்துறை, மன்னார் ஆகிய இடங்களில் சுங்கத் திணைக்களப் பணியகங்கள் இயங்கி வந்தன என்பது குறிப்பிடத்தக்கது.