ஐ.நா மனித உரிமை ஆணையாளரின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்த இணங்கவில்லை – மங்கள சமரவீர
ஐ.நா மனித உரிமை ஆணையாளர் செயிட் ராட் அல் ஹுசேன் சிறிலங்கா தொடர்பாக சமர்ப்பித்த அறிக்கையின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துவதற்கு, சிறிலங்கா அரசாங்கம் உடன்படவில்லை என்று சிறிலங்காவின் நிதி அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்தார்.
ஜெனிவா தீர்மானம், நாட்டின் இறைமைக்கு அச்சுறுத்தல் என்று எச்சரித்து, கூட்டு எதிரணியினர் சிறிலங்கா நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்திருந்த பிரேரணைக்கு பதிலளித்து இன்று உரையாற்றிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
“ஐ.நா மனித உரிமை ஆணையாளர் கடந்த மார்ச் மாதம் ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் சமர்ப்பித்த அறிக்கையில் சிறிலங்கா தொடர்பான பரிந்துரைகளை முன்வைத்திருந்தார்.
சிறிலங்கா அரசாங்கம் ஜெனிவாவில் முன்வைக்கப்பட்ட தீர்மானத்துக்கு மாத்திரமே இணங்கியது. ஐ.நா மனித உரிமை ஆணையாளரின் பரிந்துரைகளுடன் இணங்கவில்லை.
போர் தொடர்பான உள்நாட்டுப் பொறிமுறைக்குப் பதிலாக, அனைத்துலக விசாரணை நடத்துவதற்கு சிறிலங்கா அரசாங்கம் இணங்க மறுத்து விட்டது.
ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் ஊடாக முன்வைக்கப்பட்ட தீர்மானத்துக்கு 48 நாடுகள் ஆதரவு தெரிவித்திருந்தன.
மனித உரிமைகள் விவகாரங்களில் தற்போதைய அரசாங்கத்தின் முன்னெடுப்புகளை ரஷ்யா, சீனா போன்ற நாடுகளும் ஆதரித்திருந்தன.
இராணுவத்தில் உள்ள சில சக்திகள் பாதுகாப்புப் படைகளின் நற்பெயருக்கு பாதிப்பை ஏற்படுத்தக் கூடும். அத்தகைய சக்திகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும்.” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.