இனப் பதற்றத்தை ஏற்படுத்தும் சக்திகளுக்கு எதிராக கடும் நடவடிக்கை – அமைச்சரவை முடிவு
இனங்களுக்கிடையில் பதற்றத்தை ஏற்படுத்தி நாட்டில் நல்லிணக்கத்தைச் சீர்குலைப்பதற்கு முயற்சி செய்யும் சக்திகளுக்கு எதிராக சட்ட ரீதியாக கடும் நடவடிக்கைகளை எடுப்பதற்கு சிறிலங்கா அமைச்சரவை தீர்மானத்துள்ளது.
நேற்றுக்காலை சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன தலைமையில் நடந்த அமைச்சரவைக் கூட்டத்திலேயே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய சமூகங்களுக்கிடையில் பதற்றத்தை ஏற்படுத்த முனையும் சக்திகள் குறித்து விழிப்பாக இருக்கும் படியும், அவர்களுக்கு எதிராக சட்டத்தை கடுமையாக நடைமுறைப்படுத்தும் படியும் அனைத்துக் காவல் நிலையங்களுக்கும் அரசாங்கம் உத்தரவிட்டுள்ளது.
இதுகுறித்து இணை அமைச்சரவைப் பேச்சாளர் கயந்த கருணாதிலக ஊடகங்களுக்கு தகவல் வெளியிடுகையில், “இனரீதியான பதற்றத்தை ஏற்படுத்துவதற்கான வாய்ப்புக்காக நாட்டின் அனைத்துப் பகுதிகளிலும் உள்ள அனைத்து இனங்களிலும் உள்ள கடும்போக்காளர்கள் காத்துக் கொண்டிருக்கின்றனர்.
இந்த அரசாங்கத்தினால் வழங்கப்பட்டுள்ள சுதந்திரத்தை அவர்கள் தமது மறைமுக நோக்கங்களுக்காக பயன்படுத்துகின்றனர்.
ஆனால், எந்தவொரு கட்சி அல்லது குழுவினதும் தடையுமின்றி ஒவ்வொரு குடிமகனினதும் புதிய சுதந்திரத்தை உறுதிப்படுத்துவதில் அரசாங்கம் உறுதியாக இருக்கிறது.
இன நல்லிணக்கத்தையும் சட்டம் ஒழுங்கையும் பாதுகாப்பதற்காக, சட்டத்தை நடைமுறைப்படுத்தும் அதிகாரிகள் இன்னும் தீவிரமாக செயற்படுவார்கள்’ என்றும் அவர் தெரிவித்துள்ளார்.