அவுஸ்ரேலியப் பயணத்தில் இருந்து மங்கள சமரவீர விலகல்
சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவுடன் அவுஸ்ரேலியாவுக்கு மேற்கொள்ளவிருந்த பயணத்தில் இருந்து அமைச்சர் மங்கள சமரவீர விலக்கப்பட்டுள்ளார்.
சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன மூன்று நாள்கள் அரசுமுறைப் பயணமாக இன்று பிற்பகல் அவுஸ்ரேலியாவுக்குப் புறப்படவுள்ளார்.
இந்தப் பயணத்தில் வெளிவிவகார அமைச்சராக இருந்த மங்கள சமரவீர மற்றும் பிரதி அமைச்சர் அஜித் பெரேரா ஆகியோரும் இணைந்து கொள்வர் என்று முன்னர் அறிவிக்கப்பட்டிருந்தது.
எனினும், நேற்று நடந்த அமைச்சரவை மாற்றத்தின் போது, மங்கள சமரவீரவிடம் இருந்த வெளிவிவகார அமைச்சர் பதவி, ரவி கருணாநாயக்கவிடம் கையளிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து. அவுஸ்ரேலியப் பயணத்தில் இருந்து மங்கள சமரவீர விலகிக் கொண்டுள்ளார். அவருக்குப் பதிலாக பிரதி வெளிவிவகார அமைச்சர் ஹர்ஷ டி சில்வா இன்று சிறிலங்கா அதிபருடன் அவுஸ்ரேலியாவுக்குப் புறப்பட்டுச் செல்லவுள்ளார்.