மோடியின் பயணத்தில் பொருளாதார நோக்கங்கள் கிடையாது – இந்தியத் தூதுவர்
இந்தியப் பிரதமரின் சிறிலங்கா பயணம் எந்த பொருளாதார நோக்கங்களையும் கொண்டதாக இருக்காது என்று சிறிலங்காவுக்கான இந்தியத் தூதுவர் தரன்ஜித் சிங் சந்து தெரிவித்துள்ளார்.
ஐ.நா வெசாக் கொண்டாட்டங்களில் பங்கேற்பதற்காக, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, நாளை மறுநாள் சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொள்ளவுள்ளார்.
இதுகுறித்து தகவல் வெளியிட்ட இந்தியத் தூதுவர், “நாளை மறுநாள் மாலை கங்காராமய வெசாக் வலயத்தை சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுடன் இணைந்து, இந்தியப் பிரதமர் திறந்து வைப்பார்.
இந்தியப் பிரதமரின் இந்தப் பயணம் ஒரு யாத்திரை போலவே இருக்கும்.
இந்தியப் பிரதமருக்கு சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன நாளை மறுநாள் தனிப்பட்ட முறையில் இராப்போசன விருந்து அளிப்பார்.
அதன் பின்னர், வெள்ளிக்கிழமை, பிரதான வெசாக் நிகழ்வுகளில் அவர் பங்கேற்று விட்டு டிக்கோயாவில் மருத்துவமனை ஒன்றை திறந்து வைக்கச் செல்வார். அங்கு மலையகத் தமிழர்களைச் சந்தித்துக் கலந்துரையாடுவார்.
அங்கிருந்து கண்டிக்குச் செல்லும் இந்தியப் பிரதமர், அஸ்கிரிய, மல்வத்த பீடாதிபதிகளைச் சந்தித்து ஆசி பெறுவார். அதையடுத்து, புதுடெல்லி திரும்புவார்” என்று தெரிவித்துள்ளார்.