மேலும்

அனுமன் பாலம் குறித்து இந்தியாவுடன் இணக்கப்பாடு ஏற்படவில்லை – சிறிலங்கா பிரதமர்

Nitin-Ranilஇந்தியாவையும் சிறிலங்காவையும் இணைக்கின்ற பாலத்தை அமைப்பது தொடர்பாக அண்மைய இந்தியப் பயணத்தின் போது எந்த இணக்கப்பாடும் ஏற்படவில்லை என்று சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

சிறிலங்கா நாடாளுமன்றத்தில் நேற்று, கூட்டு எதிரணி உறுப்பினர் உதய கம்மன்பில எழுப்பிய கேள்விக்குப் பதிலளித்த போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

‘இந்தியப் பயணத்தின் போது இரண்டு நாடுகளுக்கும் இடையில் புரிந்துணர்வு உடன்பாடு ஒன்று செய்து கொள்ளப்பட்டது. அந்த புரிந்துணர்வு உடன்பாட்டில், யாழ்ப்பாணம்- மன்னார், மன்னார்-வவுனியா, வவுனியா- திருகோணமலை, திருகோணமலை தம்புள்ள வீதிகளை அபிவிருத்தி செய்வது தொடர்பான விடயங்கள் தான் உள்ளடக்கப்பட்டுள்ளன.

இவை ஒரு கொள்கை திட்டத்தின் அடிப்படையில் தான் வருகின்றன. அபிவிருத்திச் செயற்பாடுகள் தொடர்பாக இறுதி செய்யப்பட வேண்டிய தேவை உள்ளது.

இந்தியாவின் நெடுஞ்சாலைகள் மற்றும் கப்பல்துறை அமைச்சர் நிதின் கட்கரி, இந்தியாவுக்கும் சிறிலங்காவுக்கும் இடையில் பாலம் அமைக்கும் திட்டம் குறித்து பேசியிருந்தார். நீண்டகால நோக்கில் இது ஒரு நல்ல திட்டம்.

எனினும் பாலம் அமைப்பது குறித்து நாம் பேச்சு நடத்தவில்லை. அவரது கருத்துக்கும் எமது கருத்துக்கும் இடையில் வேறுபாடுகள் உள்ளன. எதிர்கால செயற்பாடுகள் தொடர்பாக பின்னர் பேச்சுக்கள் நடத்தப்படும்.” என்று பதிலளித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *