கஜபா படைப்பிரிவின் தலைமை அதிகாரியாக மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வா நியமனம்
சிறிலங்கா இராணுவத்தின் கஜபா படைப்பிரிவின் 11 ஆவது தலைமை அதிகாரியாக மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வா பதவியேற்றுள்ளார்.
கஜபா படைப்பிரிவின் தலைமை அதிகாரியாகப் பணியாற்றிய வந்த மேஜர் ஜெனரல் உதய பெரேரா, கடந்த ஏப்ரல் 21 ஆம் நாள் ஓய்வு பெற்றார்.
இதையடுத்தே, கஜபா படைப்பிரிவின் தலைமை அதிகாரியாக மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வா கடந்த ஏப்ரல் 27ஆம் நாள் பதவியேற்றுக் கொண்டார்.
அனுராதபுர- சாலியபுரவில் உள்ள கஜபா படைப்பிரிவு தலைமையகத்தில் இந்த நிகழ்வு இடம்பெற்றது.
கஜபா படைப்பிரிவின் தலைமை அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ள மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வா, இறுதிக்கட்டப் போரில் இடம்பெற்ற போர்க்குற்றங்களுக்குப் பொறுப்பான அதிகாரிகளில் ஒருவராக குற்றம்சாட்டப்பட்டு வருபவராவார்.
இவருக்கு சிறிலங்கா இராணுவத் தலைமையகத்தில், இராணுவத் தளபதியின் பொது உதவி அதிகாரியாக அண்மையில் நியமனம் வழங்கப்பட்ட போது, அனைத்துலக மனித உரிமை அமைப்புகளும், செயற்பாட்டாளர்களும் கடும் அதிருப்தியையும் எதிர்ப்பையும் வெளியிட்டிருந்தனர்.
இந்த நிலையிலேயே கஜபா படைப்பிரிவின் தலைமை அதிகாரியாக மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வா நியமிக்கப்பட்டிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.