சிறிலங்கா கடற்படைக்கான இரண்டாவது ஆழ்கடல் ரோந்துக் கப்பல் கோவாவில் வெள்ளோட்டம்
சிறிலங்கா கடற்படைக்காக இந்தியாவின் கோவா கப்பல் கட்டும் தளத்தில் கட்டப்பட்ட ஆழ்கடல் ரோந்துக் கப்பல் நேற்று வெள்ளோட்டம் விடப்பட்டது.
சிறிலங்கா கடற்படைக்காக இரண்டு ஆழ்கடல் ரோந்துக் கப்பல்களை கோவா கப்பல் கட்டும் நிறுவனம் கட்டி வருகிறது.
105 மீற்றர் நீளமான இந்தக் கப்பல்கள் இரண்டும் விரைவில் சிறிலங்கா கடற்படையிடம் கையளிக்கப்படவுள்ளன.
முதலாவது கப்பல் நீரில் இறக்கப்பட்டு வெள்ளோட்டம் விட்டு பார்க்கப்பட்டு, அதன் தொழில்நுட்ப கருவிகள் உள்ளிட்டவற்றைப் பொருத்தும் இறுதிக்கட்டப் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
இதில் பயிற்சிகளைப் பெறுவதற்காக சிறிலங்கா கடற்படை அதிகாரிகள் குழுவொன்று ஏற்கனவே கோவா சென்றுள்ளது.
இந்த நிலையில், இரண்டாவது ஆழ்கடல் ரோந்துக் கப்பல் நேற்று நீரில் இறக்கப்பட்டு வெள்ளோட்டம் விடப்பட்டது.
இதையடுத்து, கப்பலில் இறுதிக்கட்ட தொழில்நுட்பக் கருவிகள் பொருத்தப்பட்ட பின்னர், இந்த ஆண்டு இறுதிக்கும் சிறிலங்கா கடற்படையிடம் ஒப்படைக்கப்படும்.