கீதா குமாரசிங்கவின் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியைப் பறித்தது மேல் முறையீட்டு நீதிமன்றம்
இரட்டைக் குடியுரிமை வைத்திருந்த ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினரான கீதா குமாரசிங்க தகுதியிழந்தவராக சிறிலங்கா மேல்முறையீட்டு நீதிமன்றம் அறிவித்துள்ளது.
அரசியலமைப்புச் சட்டத்தின் 19 ஆவது திருத்தத்துக்கு அமைய, இரட்டைக் குடியுரிமை பெற்ற ஒருவர் சிறிலங்கா நாடாளுமன்ற உறுப்பினராக அங்கம் வகிக்க முடியாது.
எனவே, கீதா குமாரசிங்கவை நாடாளுமன்ற உறுப்பினராக தகுதியற்றவர் என்று அறிவிக்கக் கோரி, நான்கு பேர் மேல்முறையீட்டு நீதிமன்றத்தில் மனுச் செய்திருந்தனர்.
இந்த நிலையில், கீதா குமாரசிங்க சுவிற்சர்லாந்தில் இன்னமும் குடியுரிமையைக் கொண்டிருப்பதாக மேல்முறையீட்டு நீதிமன்றத்தில் சட்டமா தெரிவித்திருந்தார்.
அரசியலமைப்பின் 91(1) பிரிவின் கீழ் கீதா குமாரசிங்க நாடாளுமன்ற சிறப்புரிமைகளைப் பெறுவதற்கோ, நாடாளுமன்ற உறுப்பினராக அங்கம் வகிப்பதற்கோ தகுதியற்றவர் என்று பிரதி சொலிசிற்றர் ஜெனரல் ஜனக் டி சில்வா, நீதிமன்றத்துக்கு அறிவித்திருந்தார்.
இந்த நிலையிலேயே கீதா குமாரசிங்க நாடாளுமன்ற உறுப்பினராக தகுதியற்றவர் என்று மேல்முறையீட்டு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் சார்பில் காலி மாவட்டத்தில் இருந்து தெரிவு செய்யப்பட்ட கீதா குமாரசிங்க, மகிந்த ராஜபக்சவின் நெருங்கிய ஆதரவாளர் என்பது குறிப்பிடத்தக்கது.