கொழும்பு துறைமுக கொள்கலன் முனைய அபிவிருத்தியும் இந்தியாவிடம் ஒப்படைப்பு
கொழும்பு துறைமுக கொள்கலன் முனையத்தை இந்தியாவுடன் இணைந்து கூட்டு முயற்சியாக அபிவிருத்தி செய்யும் திட்டம் தொடர்பான அறிவிப்பை சிறிலங்கா அரசாங்கம் இந்த மாத இறுதியில் வெளியிடும் என்று எதிர்பார்க்கப்படுவதாக கொழும்பு ஆங்கில நாளிதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
புதுடெல்லியில் இந்தியா- சிறிலங்கா இடையில் கடந்தவாரம் செய்து கொள்ளப்பட்ட புரிந்துணர்வு உடன்பாட்டுக்கு அமையவே கொழும்பு துறைமுக கொள்கலன் முனைய அபிவிருத்திக்கான ஒப்பந்தம் இந்தியாவுக்கு வழங்கப்படவுள்ளது.
அதேவேளை, இந்த புரிந்துணர்வு உடன்பாட்டுக்கு அமைய, அபிவிருத்தித் திட்டங்களை முன்னெடுப்பது தொடர்பான முடிவுகளை எடுப்பதற்கு இரண்டு நாடுகளும் இணைந்து கூட்டு செயலணி ஒன்றை அமைக்கவுள்ளன.
இம்மாத முதற்பாதிக்குள் இந்தச் செயலணி அமைக்கப்பட்டு, அதன் முதலாவது கூட்டம் நடத்தப்படும் என்றும் செய்திகள் தெரிவிக்கின்றன.
அதேவேளை, கடந்த வாரம் கைச்சாத்திடப்பட்ட புரிந்துணர்வு உடன்பாட்டில் இடம்பெற்றுள்ள விடயங்களை இரண்டு நாடுகளும் இன்னமும் பகிரங்கப்படுத்தவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.