யாழ். பல்கலைக்கழக புதிய துணைவேந்தராகப் பொறுப்பேற்றார் பேராசிரியர் விக்னேஸ்வரன்
சிறிலங்கா அதிபரால் யாழ். பல்கலைக்கழக புதிய துணைவேந்தராக நியமிக்கப்பட்ட பேராசிரியர் விக்னேஸ்வரன் இன்று கடமைகளைப் பொறுப்பேற்றார்.
இன்று காலை யாழ். பல்கலைக்கழகத்தில் இடம்பெற்ற நிகழ்வில், விஞ்ஞான பீடாதிபதியாகப் பணியாற்றிய பேராசிரியர் விக்னேஸ்வரன், புதிய துணைவேந்தராகப் பதவியை ஏற்றுக் கொண்டார்.
இந்த நிகழ்வில் ஓய்வுபெறும் துணைவேந்தர் பேராசிரியர் வசந்தி அரசரட்ணம், முன்னாள் துணைவேந்தர் பேராசிரியர் பொ.பாலசுந்தரம்பிள்ளை உள்ளிட்ட ஓய்வுநிலை மற்றும் பணிநிலைப் பேராசிரியர்கள், விரிவுரையாளர்கள், பல்கலைக்கழக சமூகத்தினர் ஆகியோர் கலந்து கொண்டனர்.
யாழ். பல்கலைக்கழக துணைவேந்தப் பதவிக்கு நடத்தப்பட்ட தேர்தலில், தொழில்நுட்ப கற்கைகள் பீடத்தின் தலைவர் பேராசிரியர் சிறிசற்குணராஜா முதலாவது இடத்தையும், விஞ்ஞான பீடாதிபதியாக இருந்த பேராசிரியர் விக்னேஸ்வரன் இரண்டாமிடத்தையும், பேராசிரியர் வேல்நம்பி மூன்றாமிடத்தையும் பெற்றிருந்தனர்.
இவர்கள் மூவரின் பெயர்களும் மானியங்கள் ஆணைக்குழுவுக்கு பல்கலைக்கழக பேரவையினால் அனுப்பி வைக்கப்பட்டிருந்தன.
இந்த நிலையில், தேர்தலில் இரண்டாமிடத்தைப் பெற்ற பேராசிரியர் விக்னேஸ்வரனை யாழ்.பல்கலைக்கழக துணைவேந்தராக சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன நியமித்திருந்தார்.
இதற்கமைய, புதிய துணைவேந்தராக பேராசிரியர் விக்னேஸ்வரன் இன்று கடமைகளை பொறுப்பேற்றார். மூன்று ஆண்டுகளுக்கு இவர் இந்தப் பணியில் நீடிப்பார்.